
கம்பீருக்கு இடம் இல்லை
கௌதம் கம்பீர் பல வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்கமால் இருந்து வருகிறார். அவர் நன்றாக ரன் குவித்து, தன் பார்மை பல முறை நிரூபித்தும் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டு வந்தது. அதற்கு காரணம், அவர் அடிக்கடி கோபப்படுகிறார். சக வீரர்களோடு சுமூக நிலையில் பழகவில்லை என காரணங்கள் கூறப்பட்டது.
எட்டு பவுண்டரிகள் அடித்த கம்பீர்
இந்த நிலையில், அவர் ரஞ்சி தொடரிலும் கோபம் கொள்ளும் படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹிமாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் எட்டு பவுண்டரிகள் அடித்து 44 ரன்கள் எடுத்து இருந்தார் கம்பீர். அப்போது 17வது ஓவரில் மாயங்க் டாகர் என்ற சுழல் பந்துவீச்சாளர் பந்து வீசினார்.

இது அவுட் இல்லையே!!
அவர் வீசிய பந்து பேட்டில் படாமல், காலில் பட்டு பீல்டர் வசம் சென்றது. அதை கேட்ச் பிடித்த உடன் ஹிமாச்சல் அணியினர் அவுட் கேட்டனர். அம்பயர் யோசிக்காமல் அவுட் கொடுத்து விட்டார். இதைக் கண்ட கம்பீர் பந்து பேட்டிலேயே படவில்லையே என சைகை காட்டினார். எனினும், அம்பயர் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால், கடுப்போடு பெவிலியன் திரும்பினார் கம்பீர்.

கம்பீரின் மனக் குமுறல்
கம்பீர் சும்மாவே கோபப்படுவார். அவருக்கு தவறான தீர்ப்பு வேறு கொடுத்து, இப்படி சோதிக்கிறீர்களே என நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. "நன்றாக ஆடினாலும் இந்திய அணியில் இடம் கிடைக்காது. சரி, உள்ளூர் போட்டியாவது ஆடலாம் என பார்த்தால் இங்கேயும் இப்படி பண்றீங்களே" என்ற கம்பீரின் மனக் குமுறல் நமக்கே கேட்கும் போல. சமீபத்தில், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தானாகவே விலகினார் கம்பீர். அவர் அடுத்து அரசியலில் குதிக்க உள்ளார் என கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications











