மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர், இந்திய ஒருநாள் அணியின் ஆல் டைம் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். கேகேஆர் அணியின் ஆலோசகராக பணியாற்றிய முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு பின் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகியதற்கு காரணமும் பயிற்சியாளர் பொறுப்புக்காக தான் என்று பார்க்கப்படுகிறது.

ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா முன்னதாக முடிவு செய்திருந்ததாகவும், அதற்கான அறிவிப்பு தாமதமாக வெளியானதாகவும் நம்பப்படுகிறது. இந்த நிலையில் கவுதம் கம்பீர் தனது ஆல் டைம் இந்திய ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.
அந்த அணியில் 7 பேட்ஸ்மேன்கள், 4 பவுலர்கள் இடம்பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக விரேந்தர் சேவாக் மற்றும் தன்னையே தேர்வு செய்துள்ளார். கவுதம் கம்பீர் எப்போதும் இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன் என்ற கூட்டணியில் செயல்பட வேண்டும் என்று விரும்புபவர். இதன் காரணமாகவே சேவாக், கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் நம்பர் 3ல் ராகுல் டிராவிட்டும், நம்பர் 4ல் சச்சின் டெண்டுல்கரும், நம்பர் 5ல் விராட் கோலியும், நம்பர் 6ல் யுவராஜ் சிங்கையும் தேர்வு செய்துள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்திருக்கிறார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது என்பதையும் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து நம்பர் 8ல் லெக் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே, நம்பர் 9ல் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், நம்பர் 10ல் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இர்ஃபான் பதான் மற்றும் நம்பர் 11ல் ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதில் 4 முழு நேர பவுலர்களையும், யுவராஜ் சிங்கை ஆல் ரவுண்டராகவும் தேர்வு செய்துள்ளதாக புரிந்து கொள்ளலாம்.
அதேபோல் 10வது வீரர் வரை பேட்டிங் திறமை கொண்ட வீரர்களையே கம்பீர் தனது ஆல் டைம் ஒருநாள் அணி பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறார். இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை ஆல்டைம் ஒருநாள் அணியில் கம்பீர் சேர்க்கவில்லை. 3 முறை இரட்டை சதம் விளாசிய அவர், 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.