மும்பை: இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை நீக்கும் முயற்சியில் பயிற்சியாளர் கம்பீர் ஈடுபடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அணியை விட்டு நீக்க முயற்சி நடப்பதாக பல முன்னாள் வீரர்கள் சாடியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி, தற்போது இருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மற்ற நிர்வாகிகளை விட அஸ்வின் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

இந்த பயிற்சியாளரை விட இவர்கள் அனைவரும் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். எனவே பயிற்சியாளர் சொல்லும் விஷயத்திற்கு கேள்வி கேட்கும் தகுதி, இந்த சீனியர் வீரர்களுக்கு இருக்கிறது பயிற்சியாளர் ஒன்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்கும் அனுபவமும் இந்த சீனியர் வீரர்களுக்கு இருக்கிறது.
இதனால் தான் இந்த சீனியர் வீரர்கள் அணிகள் இருக்கக்கூடாது என கம்பீர் முடிவெடுத்திருக்கிறார். நான் அப்போதிலிருந்து கவனித்து வருகிறேன். கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு பல சர்ச்சைகள் இந்திய அணியில் நிலவுகிறது. தற்போது நடைபெற்று வரும் எந்த விஷயமும் இந்திய அணிக்கு நல்லது கிடையாது.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அஸ்வின் ஓய்வு பெற்று விட்டார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டனர். இன்னும் பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்போது வீரர்களின் எதிர்காலம் குறித்து நிலையற்ற தன்மை நிலவுகிறது.
மேலும் சில வீரர்கள் திடீரென்று பிளேயிங் லெவனுக்குள் வருகிறார்கள். இதற்கு காரணம் கம்பீரின் முடிவு தான் தவிர வேறு ஒன்றும் இல்லை. வீரர்கள் இமேஜை உடைக்கும் விதமாக கம்பீர் செயல்படுகிறார். இந்திய அணியில் தங்களுக்கு வேலை இல்லை என்பதை இந்த வீரர்கள் உணர தொடங்கினால் நிச்சயம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள்.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் கம்பீர் நேரடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார். ஏனென்றால் இருவரும் வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள். அதை யாராலும் மறுக்க முடியாது. உலகக்கோப்பை தொடரில் இந்த இரண்டு வீரர்களையும் சேர்க்கவில்லை என்றால் கம்பீர் போடும் திட்டம் மோசமானதாக தான் இருக்கும் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.