
ரோகித் கேப்டன்சி
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டுவிட்டதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி கண்டால் போதும், இறுதிப்போட்டிக்கான இடத்தை இந்தியா உறுதி செய்துவிடும். அங்கும் ஆஸ்திரேலிய அணியை தான் எதிர்கொள்ள வேண்டும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்
கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் ஐசிசி கோப்பையை வெல்லாமல் உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்ல வாய்ப்பு இருந்தது. விராட் கோலியின் கேப்டன்சியில் அசால்ட்டாக இறுதி சுற்று வரை சென்ற இந்திய அணி நியூசிலாந்திடம் துரதிஷ்டவசமாக தோற்றது. எனவே கோலியை விட சிறப்பாக கேப்டன்சி செய்து ரோகித்தாவது வெற்றியை தேடிக்கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கம்பீர் விளக்கம்
இந்நிலையில் ரோகித் கேப்டன்சி குறித்து கம்பீர் பேசியுள்ளார். அதில், விராட் கோலி - ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு எந்தவித வித்தியாசமுமே இல்லை. கோலியின் திட்டங்களை தான் ரோகித் தற்போது செயல்படுத்தி வருகிறார். ஆனால் இது இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக இருக்கும். ரோகித் சர்மாவிற்கான உண்மையான சவால்களே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளன.

என்ன காரணம்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா களங்களில் தான் விராட் கோலிக்கு அதிக பிரச்சினைகள் இருந்துள்ளன. எனவே ரோகித்திற்கும் அதே சவால்கள் இருக்கும். ரோகித் தற்போது பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்ஷர், சிராஜ், ஷமி ஆகியோரை அதிகம் பயன்படுத்துகிறார். இவர்களை வெற்றிகரமானவர்களாக மாற்றியது கோலி தான். எனவே இருவரும் ஒரே மாதிரியான கேப்டன்கள் தான். அயல்நாடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓவல் மைதானம்
ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டுவிட்டால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும். இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தான் நடைபெறும் எனத் தெரிகிறது. இங்கு ஆஸ்திரேலிய அணியை தான் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் கம்பீர் விடுத்த எச்சரிக்கையை ரோகித் சரிசெய்வாரா என பார்ப்போம்.


Click it and Unblock the Notifications