மும்பை: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம், இந்திய அணியில் என்ன நடந்தது எனத் தெரியாமல் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இதன் பின்னணியில் கௌதம் கம்பீர் கொடுத்த அழுத்தம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் ரோகித் சர்மாவையும், விராட் கோலியையும் பாதி தொடரில் அணியிலிருந்து நீக்குவதற்கான ஒரு திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார். அவர்கள் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால், தொடரில் இருந்து பாதியில் வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இது பற்றிக் பார்க்கலாம்.

ரோகித் சர்மாவுக்கு 38 வயதாகும் நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். அதில் ஒரு நியாயம் உள்ளது. விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி வருகிறார். தற்போது நல்ல பேட்டிங் பார்மில் இருக்கிறார். விரைவில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி அதிலும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் 36 வயதாகும் விராட் கோலி திடீரென தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 11 முதல் துவங்க உள்ளது. அதற்கான அணித் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக பிசிசிஐ-யில் அது தொடர்பான விவாதம் நடந்து வந்தது.
அப்போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தாங்கள் இங்கிலாந்து தொடரில் விளையாட விருப்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அப்போது கௌதம் கம்பீர் தரப்பில் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி அளிக்க முடியாது. விராட் கோலி கேப்டன் பதவி கேட்ட நிலையில், அவருக்கும் கேப்டன் பதவி அளிக்க முடியாது என கம்பீர் மறுத்திருக்கிறார்.
அத்துடன் அவர்கள் இருவரும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே கருதப்படுவார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் அவர்களது செயல்பாடுகள் குறித்து மறு ஆய்வு நடத்தப்படும். அவர்களது செயல்பாடு திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், அவர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு கௌதம் கம்பீர் பிசிசிஐ-யிடம் தனது முடிவைச் சொல்லி இருக்கிறார்.
தேர்வு குழுவினர் இந்த முடிவை அப்படியே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் கூறி இருக்கின்றனர். இத்தனை ஆண்டு காலமாக இந்திய அணிக்காக விளையாடிய தங்களுக்கு இது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதை அறிந்தவுடன் இருவரும் அதிர்ந்திருக்கின்றனர். ஆனால், கௌதம் கம்பீர் இந்த முடிவை எடுப்பார் என்பதை அவர்கள் முன்பே ஊகித்திருந்தனர்.
ஒருவேளை சரியாக ரன் குவிக்கவில்லை என்றால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து வெளியேற வேண்டியது இருக்கும். அதன் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படுமா என்பதும் சந்தேகமே. அது போன்ற ஒரு அவமானத்தைச் சந்திப்பதற்குப் பதிலாக, அதற்கு முன்பாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என ரோகித் சர்மாவும், விராட் கோலியும் முடிவெடுத்திருக்கின்றனர். இதுதான் கடந்த சில நாட்களாக நடந்திருக்கிறது. இதனால்தான் வரிசையாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.
கௌதம் கம்பீரின் இந்தக் கட்டுப்பாடு சரியானதா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது தான். அணியின் நலன் கருதி கௌதம் கம்பீர் அது போன்ற ஒரு விஷயத்தைக் கூறியிருந்தாலும், ஒரே நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியிலிருந்து விலகுவது என்பது அணிக்குப் பின்னடைவாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
முதலில் 38 வயதான ரோகித் சர்மாவை வெளியேற்றிவிட்டு, அதன் பிறகு விராட் கோலிக்கு சில தொடர்களில் வாய்ப்பளித்து, அதன் பின்னர் அவரை நீக்குவது குறித்துக் கௌதம் கம்பீர் சிந்தித்து இருக்கலாம். ஆனால், விராட் கோலி விஷயத்தில் அவர் அவசரப்பட்டு விட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.