பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது பணிச்சுமையைக் காரணம் காட்டி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடந்த காலத்தில் பணிச்சுமை காரணமாக வீரர்கள் போட்டிகளில் இருந்து விலகுவது பற்றிப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
"பணிச்சுமையைக் சுட்டிக்காட்டி வீரர்கள் போட்டிகளில் இருந்து விலகக் கூடாது; அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாட வேண்டும்" என முன்பு கௌதம் கம்பீர் பேசியிருந்தார். இந்த நிலையில், அவர் பயிற்சியாளர் ஆனதற்குப் பிறகு இந்திய அணியில் "பணிச்சுமை மேலாண்மை" என்ற பெயரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கலாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"ஒரு மனிதர் பயிற்சியாளராவதற்கு முன்பு ஒரு பேச்சு; பயிற்சியாளர் ஆனதற்குப் பிறகு வேறு ஒரு பேச்சா?" என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என சில ரசிகர்கள் கூறினாலும், சிலரோ அவர் ஐந்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் எனக் கூறி வருகின்றனர். சுனில் கவாஸ்கர் இதற்கு முன்பே அதை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் கம்பீர் இதற்கு முன்பு பேசிய வீடியோவில், "நான் ஒரு விஷயத்தை மிகவும் நம்புகிறேன்: நீங்கள் நல்ல வீரராக இருந்தால் அனைத்து வித கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாட வேண்டும். காயம் இதைச் சுட்டிக்காட்டி பணிச்சுமை மேலாண்மை செய்வதை நான் நம்பவில்லை. உங்களுக்கு காயம் ஏற்பட்டால் நீங்கள் சென்று அதிலிருந்து மீண்டு வாருங்கள், அவ்வளவுதான். இதை நாம் இப்படித்தான் எளிமையாக அணுக வேண்டும்."
மேலும் கம்பீர் பேசுகையில், "நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினால், எந்த நல்ல வீரரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் என்றோ, ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் என்றோ முத்திரை குத்தப்படுவதை விரும்ப மாட்டார்கள். விளையாட்டு வீரர்களின் வாழ்வில் காயம் ஒரு பகுதி. நீங்கள் மூன்று வடிவங்களிலும் விளையாடினால், உங்களுக்கு காயம் ஏற்பட்டால் நீங்கள் சென்று அதிலிருந்து மீண்டு வர வேண்டும்," என கௌதம் கம்பீர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.