மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கௌதம் கம்பீர் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கவில்லை.
அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க உள்ள மூன்று ஐசிசி தொடர்களுக்கு குறி வைத்து இருக்கிறார். இதில் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. மேலும் ஓய்வு பெற மறுக்கும் ரோஹித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தமும் ஏற்பட்டு இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள 2026 டி20 உலக கோப்பை, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் போட்டி உலக கோப்பை ஆகிய இந்த மூன்று தொடர்களுக்காகவும் இப்போது இருந்தே இந்திய அணிகளை தயார் செய்யும் முடிவில் இறங்கி இருக்கிறார் கம்பீர்.
மேலும், இனி அணித்தேர்வில், மூன்று வித அணிகளிலும் சேர்ந்து ஆடும் வீரர்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற எந்த கட்டாயமும் இருக்கக்கூடாது, ஒவ்வொரு அணியிலும் ஆல் ரவுண்டர்கள், அந்த வடிவத்துக்கான ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் அதிக அளவில் இருக்க வேண்டும் என அவர் பிசிசிஐ-யிடம் வாதம் செய்து, அதற்கு ஒப்புதலும் வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது.
ஏனெனில், தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆன டி20 அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த அணியில் உள்ள பல வீரர்கள் இந்திய ஒருநாள் அணியிலோ, டெஸ்ட் அணியிலோ இடம் பெறவில்லை. அதை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர், இனி ஒவ்வொரு வடிவத்திலும் பெரும்பாலும் அந்த வடிவத்தில் சிறந்து விளங்கும் வீரர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்பதை உறுதியாக கூறியிருக்கிறார்.
2026 டி20 உலகக் கோப்பைக்கான அணியை கிட்டத்தட்ட அவர் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். அந்த அணி தான் தற்போது டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. எனவே, அடுத்து 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான அணியின் பெரும்பாலான வீரர்களை இப்போதே தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் கம்பீர்.
முக்கியமாக இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் யார் என்பதை இப்போதே முடிவு செய்துவிட வேண்டும். ஏனெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகள் அனைத்திலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என கம்பீர் உறுதியாக இருக்கிறார்.
தற்போது ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்திருக்கும் நிலையில், அவரது திட்டம் என்ன, அவரால் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாட முடியுமா, கேப்டனாக தொடர விரும்புகிறாரா போன்ற விஷயங்களை கௌதம் கம்பீர் இப்போதே அறிய விரும்புகிறார்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரிகளுடனான சந்திப்பு நடத்தி ரோஹித் சர்மாவுடன் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் இப்போதே தனது இரண்டு ஆண்டு திட்டத்தை கூற வேண்டும் என கெடு விதிக்கப்பட உள்ளது. அடுத்து 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியையும் தேர்வு செய்ய இப்போதே கௌதம் கம்பீர் தயாராகிவிட்டார்.
இந்திய டெஸ்ட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணியில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணியுடன் கௌதம் கம்பீர் பயணம் செய்ய இருக்கிறார்.
இவ்வாறாக கம்பீர் இப்போதே அடுத்த இரண்டு ஆண்டு திட்டத்துக்காக மூன்று வித அணிகளுக்காகவும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். இனி கௌதம் கம்பீர் தான் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளார்.
ரோஹித் சர்மாவுக்கு 38 வயது ஆகிறது. எனவே அவரால் இனி இந்திய அணியின் எதிர்காலத்தை திட்டமிட முடியாது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வென்றுவிட்டதால், கம்பீருக்கான அதிகாரம் இந்திய அணியில் கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.