மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, இளம் வீரர் சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்திருப்பது, ஒரு சாதாரண பதவி மாற்றம் அல்ல. இது, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கான ஒரு எச்சரிக்கை மணி என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
மேலும், இந்த முடிவுடன் இது நிற்காது, "இன்னும் மோசமான செய்திகளுக்குத் தயாராக இருங்கள்" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம், தேர்வுக் குழுவின் இந்த முடிவை ஆதரித்துள்ள சுனில் கவாஸ்கர், இந்த முடிவை ரோஹித் சர்மாவே ஏற்றுக்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "இந்த முடிவு சரிதான். இதை ரோஹித் சர்மாவே ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், நீங்கள் இரண்டு ஆண்டுகள் முன்னோக்கிப் பார்க்கும்போது, ஒரு இளம் கேப்டனைத் தயார்படுத்த வேண்டியது அவசியம். அந்தச் சிந்தனையில்தான் தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. அணிதான் முதலில் வர வேண்டும். தனிப்பட்ட முறையில் ரோஹித் நிறைய சாதித்துவிட்டார். சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பை என வென்று தந்துள்ளார். அவரது கேப்டன்சியில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், எதிர்காலம்தான் முக்கியம்" என்று தேர்வுக்குழுவின் முடிவுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் எழுப்பியுள்ள கேள்விதான் இங்கே மிக முக்கியமானது. "2027 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மா தயாராக இருப்பாரா என்பது நமக்குத் தெரியாது. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்."
"சர்வதேச கிரிக்கெட் அட்டவணையைப் பார்த்தால், இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில்லை. பெரும்பாலான சுற்றுப்பயணங்கள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளையே கொண்டுள்ளன. ஒரு வருடத்தில் வெறும் 5-7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினால், உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடருக்குத் தேவையான போட்டி அனுபவம் அவருக்குக் கிடைக்காது" என்று கவாஸ்கர் விளக்கமளித்தார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரோஹித் மற்றும் கோலிக்கு இருப்பது ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே. ஆனால், அதிலும் போதுமான போட்டிகள் இல்லை. இந்தச் சூழலில், அவர்கள் தங்களது ஃபார்மை எப்படித் தக்கவைத்துக் கொள்வார்கள்? இதற்கு கவாஸ்கர் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"நிச்சயமாக, நீங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தயாராக இருப்பீர்களா? அதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டால், இன்னும் மோசமான செய்திகளுக்குத் தயாராக இருங்கள். ஒருநாள் போட்டிகள் குறைவாகத்தான் உள்ளன என்பது அவர்களுக்கும் தெரியும். அதற்கு அவர்கள் தங்களைத் தயாராக வைத்திருக்க, விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும். ஒருவேளை, அதில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால்தான் தேர்வுக்குழு இந்த கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்" என்று கவாஸ்கர் கூறினார்.