ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. இதில் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் மேக்ஸ்வேல் வெறும் 5 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் மேக்ஸ்வெல்லை இந்திய ரசிகர்கள் பலரும் கலாய்த்தனர்.

ஆனால் பேட்டிங்கில் சொதப்பிய மேக்ஸ்வெல், பவுலிங்கில் கில்லியாக செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கின் போது பவர் பிளேவில் ரோகித் சர்மா ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். இதனால் 11வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் மேக்ஸ்வெல்லை கொண்டு வந்தார். முதல் ஓவரிலேயே வாஷிங்டன் சுந்தரை வீழ்த்தி அசத்திய மேக்ஸ்வெல், பின்னர் ரோகித் சர்மாவையும் 81 ரன்களில் வீழ்த்தி மாஸ் கம்பேக் கொடுத்தார்.
ஆனால் மேக்ஸ்வெல்லின் அசத்தலான பவுலிங் அத்துடன் நிற்கவில்லை. அரைசதம் விளாசிய விராட் கோலி அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது மேக்ஸ்வெல் வீசிய 27வது ஓவரில் விராட் கோலி டாப் எட்ஜாகி 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயரையும் போல்டாக்கி வெளியேற்றினர். இதன் மூலம் இந்திய அணியின் டாப் 4 வீரர்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் மேக்ஸ்வெல்.
இன்றைய ஆட்டத்தில் 10 ஓவர்களை வீசிய மேக்ஸ்வெல், வெறும் 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பிட்சில் எந்த உதவியும் இல்லாத போது ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீச வேண்டும் என்ற அடிப்படையை மட்டும் பயன்படுத்தி சாதித்துள்ளார் மேக்ஸ்வெல். இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான குல்தீப் யாதவ் 6 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில், மேக்ஸ்வெல் 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால் உலகக்கோப்பை தொடரில் மேக்ஸ்வெல் ஆல்ரவுண்டராக ஜொலிப்பார் என்று நம்பப்படுகிறது.