
படிக்கல் அதிரடி
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். வழக்கம் போல் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடி + நிதானம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது. குறிப்பாக, படிக்கல் தொடக்கம் முதலே பஞ்சாப் பவுலர்களை விளாச ஆரம்பித்துவிட்டார். கோலி அடக்கி வாசிக்க, நல்ல ரிதம் கண்ட படிக்கல், மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விளாசினார். இந்நிலையில், ரவி பிஷ்னாய் வீசிய 7.3வது ஓவரில், ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயன்றார் படிக்கல். பந்து பேட்டில் படாததால், கீப்பர் ராகுல் வசம் சென்றது. அப்போது, அவர் கேட்ச் பிடித்த போது, பேட்டில் பட்டது போல் ஒரு சப்தம் கேட்டது. ஆனால், அம்பயர் அனந்த பத்மநாபன் அவுட் கொடுக்கவில்லை. இதனால், சற்றும் யோசிக்காத ராகுல் ரிவ்யூ சென்றார். ரிவ்யூவில் பந்து கிளவுஸில் பட்டது போன்று தான் அல்டரா எட்ஜில் காட்டியது. அதாவது அங்கு லைட்டாக ஸ்பைக் இருந்தது.

ராகுல் கோபம்
ஆனால், மூன்றாவது அம்பயர் அதனை அவுட் இல்லை அறிவிக்க, ராகுல் டென்ஷனாகிவிட்டார். அப்போதே அவர் கள நடுவர் அனந்த பத்நாபனிடம் சென்று, "ULTRAEDGE-ல் ஸ்பைக் இருந்ததே.. கோடுகள் தெரிந்ததே.. அப்புறம் ஏன் அவுட் கொடுக்கல?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொறுமையாக பதிலளித்த அம்பயர், தன் தோள்களை குலுக்கி, இதில் தான் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பது போல் கூறினார். இதனால், ஆட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. எனினும், "வாழ்க்கை என்பது ஒரு வட்டம்" என்பது போல, மீண்டும் படிக்கல் எட்ஜ் ஆக, ராகுல் அதனை பிடித்தார். இம்முறை அவருக்கு பந்து வீசியவர் மாய்சஸ் ஹென்ரிக்ஸ். ஆனால், இம்முறை பந்து பேட்டில் சப்தம் சற்று கடுமையாக இருக்க, எந்தவித யோசனையும் இன்றி, உடனே அம்பயர் அனந்த பத்மநாபன், மூன்றாவது நடுவரிடம் செல்ல, தானே அவுட் கொடுத்துவிட, ரிவ்யூ ஏதும் எடுக்காமல் 40 ரன்களில் வெளியேறினார் தேவ்தத் படிக்கல்.

7 வருடங்களுக்கு பிறகு
அதேசமயம், அடுத்து களமிறங்கிய டேனியல்ஸ் கிறிஸ்டியன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு கேப்டன் விராட் கோலியும் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஹென்றிக்ஸ் ஓவரில் கேட்ச்சானார். முதன் முதலாக இன்று பஞ்சாப் அணியில் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் இன்று 4 ஓவர்கள் வீசி, வெறும் 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் பிறகு டி வில்லியர்ஸ் - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில், மேக்ஸ்வெல் பஞ்சாப் பவுலர்களை விட்டு விளாசினார். 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், அப்படியே குறைந்த ரன் ரேட்டை மேக்ஸ்வெல் உயிர்த்தெழ வைத்தார். கடந்த 2013, 14 ஐபிஎல் தொடர் தான் மேக்ஸ்வெல்லின் உச்சக்கட்ட திறமையை வெளிப்படுத்தி, அப்போது பஞ்சாப் அணியில் இருந்து மேக்ஸ்வெல், ஐபிஎல்லின் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து கொண்டிருந்தார். லெக் சைடில் அவர் விளாசும் பந்துகள் ஒவ்வொன்றும் மைல் தொலைவில் பறந்தன.

மீண்டும் அதே ஃபார்ம்
அதன் பிறகு அவரது ஃபார்ம் கழுதை தேய்ந்து கட்டெறும் ஆன கதையாக பஞ்சாப் அணியில் சுருங்கிக் கொண்டே செல்ல, ஒருக்கட்டத்தில் அந்த அணியின் சுமையாகிப் போனார். இதனால், அவரை பஞ்சாப் கழட்டிவிட, ஆர்சிபி கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கியது. அதற்கு இப்போதுதான் நியாயம் கற்பித்துள்ளார் மேக்ஸ்வெல். 7 வருடங்களுக்கு முன்பு அவர் அடித்த அடியை இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் மீண்டும் பார்க்க முடிந்தது.

திண்டாட்டம் தான்
டி வில்லியர்ஸ் உட்பட ஆர்சிபி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், மேக்ஸ்வெல் இறுதிக் கட்டத்தில் அணியை மீட்டெடுத்தார். ஒருக்கட்டத்தில், 150 வருவதே சிரமம் என்றிருந்த நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார். 33 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் விளாசினார். இதில், 3 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம். தனது இந்த ஃபிபார்மை தொடர்ந்து அவர் கன்டினியூ செய்தால், எதிரணிகளின் பாடு திண்டாட்டம் தான்.


Click it and Unblock the Notifications











