மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்திருந்த போது ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பார்க்கப்பட்டது. ஆனால் கிளென் மேக்ஸ்வெல் மொத்தமாக மாற்றிக் காட்டினார். எதிர்முனையில் கம்மின்ஸை வைத்து கொண்டு மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களையும் வியக்க வைத்துள்ளது.

அதிலும் சதம் விளாசிய பின் மேக்ஸ்வெல்லின் கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஒரு ரன் கூட ஓடி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்களையே நகர்த்தாமல் பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இதன்பின் முதுகில் வலி ஏற்பட, நிற்கவே முடியாமல் மைதானத்தில் படுத்தேவிட்டார். இதனால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி ஓய்வறை செல்லுமாறு ஆஸ்திரேலிய நிர்வாகம் கூறிய போதும், மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், ஒருநாள் போட்டிகளில் இதுபோன்ற சிறந்த இன்னிங்ஸை பார்த்ததே இல்லை. மேக்ஸ்வெல் ஆடிய போட்டியை மைதானத்தில் நேரில் கண்டேன் என்று எதிர்காலத்தில் பெருமையாக சொல்லும் அளவிற்கான ஆட்டம் இது. அதேபோல் வான்கடே மைதானத்தில் எப்போது விளையாடினாலும் ரசிகர்கள் மேக்ஸ்வெலுக்கு சிறந்த வரவேற்பை கொடுக்கிறார்கள்.
ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்களின் கரகோஷம் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கால்களை நகர்த்தாமல் ரன்கள் சேர்த்த போது, ரசிகர்கள் கூடுதல் உற்சாகமானார்கள். நிச்சயம் மும்பை ரசிகர்கள் சிறந்த ஆதரவை அளித்தார்கள் என்றே சொல்லலாம். நாங்கள் பேட்டிங் செய்த போது ரன்ரேட் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. ஏனென்றால் மேக்ஸ்வெல் களத்தில் இருக்கும் போது, ஒரே இலக்கு வெற்றி மட்டும் தான். 200 ரன்கள் தேவை என்ற போதும், அதனை எப்படி எடுக்க வேண்டும் என்று அவர் மனதில் முடிவு செய்துவிட்டார்.
ஆட்டம் முடிவு பெறும் சூழலில், அவர் தசைபிடிப்பால் பாதிக்கப்பட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. அதன்பின் ஒரு ரன் ஓடி சேர்த்த போது, அவரை ஸ்ரெட்சரில் தூக்கி செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அப்போதே இனி ஓடி ரன்கள் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மேலும், அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதற்குள் அவர் தயாராவார் என்று தெரிவித்துள்ளார்.