துபாய்: உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் புதிய பீல்டிங் விதிகள் அமல்படுத்தப்படுவதால், அது பவுலர்களுக்கு நிச்சயம் கடினமான சூழலைக் கொடுக்கும். கடவுளே வந்து அவர்களுக்கு உதவினால்தான் உண்டு என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பைத் தடுக்க பந்து வீச்சாளர்கள் நிச்சயம் தடுமாறுவார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகப்படுத்துகிறது. அதாவது 30 யார்டுக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும். அதாவது தூக்கி அடிக்கலாம். இது இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போதுதான் முதல் முறையாக அறிமுகமாகிறது.
இதுகுறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், கடவுள்தான் பந்து வீச்சாளர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும். புதிய விதிமுறை நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. பந்து வீச்சாளர்களுக்கு கஷ்டம்தான்.
இதுபோன்ற விதியை நான் எனது காலத்தில் சந்தித்ததில்லை. சரியான பார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களுக்கு இது பயன்படாது. அதேசமயம், யாராவது 2 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்து விட்டால், பிறகு பந்து வீச்சாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடும். அதில் சந்தேகமே இல்லை என்று கூறியுள்ளார் சச்சின்.
இந்த விதியாவது இந்தியாவின் தலைவிதியை மாற்றினால் நல்லதுதான்!