அகமதாபாத்: குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து அந்த அணியின் இன்றைய கேப்டன் ரஷீத் கான் தகவல் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை சரியில்லாததால், குஜராத் அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று ரஷீத் கான் கூறியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்காக இரு அணிகளின் சார்பாக கேப்டன்கள் வந்த போது, குஜராத் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக ரஷீத் கான் களமிறங்கியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து குஜராத் அணியின் இன்றைய கேப்டன் ரஷீத் கான் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவுக்கு சிறிதாக உடல்நிலை சரியில்லை. அதனால் தான் இன்றையப் போட்டியில் களமிறங்கவில்லை. நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
அதனால் இன்றையப் போட்டியில் களமிறங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று தெரிவித்தார். கடந்த சீசனிலேயே குஜராத் அணியின் கேப்டனாக ரஷீத் கான் ஒரு போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் இன்றையப் போட்டியில் ரஷீத் கான் களமிறங்கியுள்ளார்.

குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரு போட்டிகளாக இம்பேக்ட் பிளேயராக குஜராத் அணிக்கு களமிறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர் இன்று பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் மற்றொரு பேட்ஸ்மேனான அபினவ் மனோகரும் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.