அகமதாபாத் : மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே காட்டமாக விமர்சித்துள்ளார்.
குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி பல்வேறு சர்ச்சைகளுடன் முடிவடைந்துள்ளது. ஒன் ஃபேமிலி என்று சொல்லிக் கொள்ளும் மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அந்த அணியின் ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா நடத்திய விதம் ரசிகர்களிடையே பெரியளவில் ரசிக்கப்படவில்லை.

ஏனென்றால் ஸ்லிப் திசையில் சிறந்த ஃபீல்டரான ரோகித் சர்மாவை, திடீரென லாங் ஆன் திசையில் ஃபீல்டிங் நிறுத்தினார் ஹர்திக் பாண்டியா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்து ரசிகர்களிடையே பார்த்ததில்லை. அதேபோல் தேவையில்லாமல் ரோகித் சர்மாவை கட்டியணைத்த போது, ஹிட்மேன் நேரடியாக கோபத்தை வெளிக்காட்டினார்.
அதேபோல் ரோகித் சர்மா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய போது, மும்பை அணி கூடாரமே அமைதியாக இருக்க, ஹர்திக் பாண்டியா மட்டும் முன் நின்று கைகளை தட்டி வரவேற்றதையும் ரோகித் சர்மா ரசிக்கவில்லை. அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் உடல்மொழி பல்வேறு சூழல்களிலும் செயற்கைத்தனமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாஸின் போது ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் பிளேயிங் லெவனில், நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள் மற்றும் 7 பேட்ஸ்மேன்கள் ஆகியோர் இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் சரியான கலவையில் வீரர்கள் உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து ஜியோ சினிமாஸ் செயலியில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, எப்போதும் ஹர்திக் பாண்டியா வீரர்களின் பெயர்களை டாஸின் போது சொல்வார் என்று எதிர்பார்க்கவே மாட்டேன்.
ஏனென்றால் அவருக்கு அப்படி கூறி பழக்கமில்லை. 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள், 11 ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யார் அந்த வீரர்கள் என்பதே சரியான பதிலாக இருக்கும் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். ஹர்திக் பாண்டியா எப்போதும் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் கூறுவதை கண்களை மூடிக் கொண்டு நம்பிக்கை வைப்பவர். அப்படிதான் நேற்றைய ஆட்டத்திலும் ஹர்திக் பாண்டியா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.