மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக 2015 ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் அடிப்படைத் தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் தான் ஹர்திக் பாண்டியா. அதன் பிறகு தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தார்.
தற்போது மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். தற்போது இதன் காரணமாக இந்திய டி20 அணியின் கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கேப்டன்ஷிப் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா என்னுடைய கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதேபோன்று நான் கேப்டனாக நடந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்த விஷயத்தில் தோனி தான் எனக்கு முன்மாதிரி. வீரர்களிடமிருந்து எப்படி சிறப்பான ஆட்டத்தை வாங்குவது என்று தோனிக்கு நன்றாக தெரியும்.
அதை தான் தற்போது நான் செய்து வருகிறேன். மும்பை அணியை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் சிறந்த வீரர்களை தங்களது அணியில் சேர்த்துக் கொண்டு கோப்பையை வாங்குவார்கள். ஆனால் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு சுதந்திரமான சூழலை உருவாக்கி அவர்களிடமிருந்து திறமையை வெளிக்கொண்டு வருவார்கள். இதில் எனக்கு சிஎஸ்கேவின் வழி தான் பிடிக்கும்.

சிஎஸ்கேவை பார்த்து தான் நானும் குஜராத் அணியை இப்படி வழிநடத்த வேண்டும் என முடிவெடுத்தேன் என ஹர்திக் பாண்டியா கூறினார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பதில் மும்பை அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஹர்திக் பாண்டியாவை கண்டுபிடித்து அவருக்கு பயிற்சி கொடுத்து வளர்த்ததே மும்பை அணிதான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் தற்போது மும்பை அணி மீது ஹர்திக் பாண்டியா எப்படி குற்றம் சொல்லலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் இந்த பதிலை வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் மும்பை அணியை கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் இந்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா, மும்பை அணியை தன்னுடைய முதல் காதல் என்று தான் குறிப்பிட்டு பாராட்டி பேசி இருந்தார். மும்பையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு சிறந்த வீரர்களை வைத்து தான் கோப்பையை வென்றது. இதனால் ஹர்திக் பாண்டியா சொன்ன பதிலில் எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.