அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் ஆட்டத்தை மொத்தமாக மாற்றிக் காட்டியுள்ளா குஜராத் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். அதுமட்டுமல்லாமல் 21 பந்துகளில் அரைசதம் விளாசி, குஜராத் அணி முதல்முறையாக 200 ரன்களை எட்டுவதற்கு காரணமாகவும் விஜய் சங்கர் இருந்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. இதனால் குஜராத் அணியின் கேப்டனாக ரஷீத் கான் களமிறங்கினார். டாஸ் வென்ற ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்துள்ளது.

கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் என்று சொல்லப்படும் விமர்சகர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக குஜராத் அணி விபூதி அடித்து வருகிறது. குஜராத அணியை பார்த்து, இந்த அணி வெற்றிபெறுவதே கடிதம் என்று சொல்லப்பட்ட நிலையில், சாம்பியனாகி பதிலடி கொடுத்தது. தற்போது மீண்டும் கன்சிஸ்டன்ட் பென்ஃபார்மன்ஸ் கொடுத்து அனைவரையும் மிரட்டி வருகிறது. ஒட்டுமொத்த கணிப்புகளையும் பொய்யாக்கி ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறது குஜராத் அணி.
இன்றையப் போட்டியில் 14வது ஓவரில் அபினவ் மனோகர் ஆட்டமிழந்த போது, குஜராத் அணி டேவிட் மில்லரை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் வரிசையின் படி விஜய் சங்கரையே குஜராத் அணி களமிறக்கியது. இதனால் குஜராத் அணி ஸ்கோர் குறையும் என்று சொல்லப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சங்கர் 21 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

அதுமட்டுமல்லாமல் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசியதோடு, குஜராத் அணி முதல்முறையாக 200 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தார். 18வது ஓவரின் முடிவில் 13 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விஜய் சங்கர், அடுத்த 11 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். பெரிய ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட வந்த விஜய் சங்கர், மீண்டும் அதிரடியாக கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.