மும்பை: "லவ் ஜிகாத்" இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தொடர்பாக குஜராத் அணி வீரர் யாஷ் தயாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வேறு யாரோ பயன்படுத்தி கார்டூன் புகைப்படங்களை பதிவிட்டதாக கூறியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது குஜராத் அணி சார்பாக யாஷ் தயாள் அந்த ஓவரை வீச, இந்தப் பக்கம் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசி அதிசயத்தை நிகழ்த்தி காட்டினார். இது ஐபிஎல் தொடருக்கு பெரும் விளம்பரமாகி போனது. இதன்பின்னர் யாஷ் தயாள் குஜராத் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடிக்கவிட்ட யாஷ் தயாளுக்கு பலரும் ஆறுதல் கூறினர். இதன்பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போக, கடைசி வாரத்தில் சில போட்டிகளில் குஜராத் அணிக்காக யாஷ் தயாள் களமிறங்கினார். இந்த நிலையில் இன்று காலை யாஷ் தயாள், இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையில் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார்.
அதில், பல இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்திக் கொலை செய்வதைத் திட்டமாக வைத்துச் செயல்படும் இஸ்லாமியர் ஒருவர், கத்தியைத் தனக்குப் பின்னால் மறைத்து வைத்து மற்றொரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி பலியாக்க முயல்வதாகவும், அந்தப் பெண்ணும் தன் கண்களைக் கட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக அந்த இஸ்லாமிய நபரின் காதல் வலையில் வீழ்வதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் லவ் ஜிகாத் என்ற வார்த்தையும் அந்த கார்டூனில் இடம்பெற்றுள்ளது.
'லவ் ஜிகாத்' என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்கள் மற்றும் வேறு மதத்தின் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி தங்கள் மதத்திற்கு மதம் மாற்றி வருகிறார்கள் என்று அண்மைக் காலமாக இந்து அமைப்பினர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இதுபோன்ற மதவெறுப்புப் பிரசாரங்கள் தி கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்களிலும் வெளிப்படுத்துகின்றன.

இந்த நிலையில் பிரபல ஐபிஎல் அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரரும் மதவெறுப்பை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்தனர். இதன்பின்னர் யாஷ் தயாள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை நீக்கியதோடு, மன்னிப்பும் கோரினார். இருப்பினும் ரசிகர்கள் விமர்சனங்கள் அடங்கவில்லை.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தொடர்பாக யாஷ் தயாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இரு ஸ்டோரிகள் பதிவிடப்பட்டுள்ளது. அவை இரண்டுமே என்னால் பதிவிடப்படவில்லை. எனது பக்கத்தை வேறு யாரோ பயன்படுத்தி, ஸ்டோரிகளை பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாகா ஏற்கனவே நடவடிக்கை கோரி புகாரளித்துள்ளேன்.
என் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முழு கட்டுப்பாட்டையும் மீண்டும் என் கைகளுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. அனைத்து மதங்கள், சமூகங்கள் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது. எனது உண்மையான நம்பிக்கையை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் வெளிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.