அகமதாபாத் மண்ணில் ஆட்டமா.. அப்போ சுப்மன் கில் சதம் நிச்சயம்.. 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்!
அகமதாபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டம் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் - சாஹா இணை தொடக்க கூட்டணியாக களமிறங்கியது. அதில் சாஹா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின்னர் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது. சாய் சுதர்சன் நிதானமாக விளையாட, மறுபக்கம் சுப்மன் கில் ருத்ர தாண்டவம் ஆடினார். புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரிலேயே 3 பவுண்டரிகளை அடிக்க, 4வது ஓவரை வீசிய ஃபரூக்கி பந்துவீச்சில் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன் காரணமாக குஜராத் அணி 4 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை எட்டியது. பின்னர் நடராஜன் வீசிய 6வது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசப்பட்டது. இதன் மூலம் குஜராத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ஸ்பின்னர்களை ஐதராபாத் அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. ஆனால் பவுண்டரிகளை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனால் இளம் வீரர் சுப்மன் கில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மொத்தமாக 9 பவுண்டரிகளை விளாசிய சுப்மன் கில், ஒரு சிக்சரை கூட விளாசல் ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 5வது அரைசதத்தையும் சுப்மன் கில் எட்டினார்.

ஆனால் சுப்மன் கில்லின் அதிரடி அரைசதத்தோடு நிற்கவில்லை. 50 ரன்களை வரை பவுண்டரி மட்டும் அடித்த சுப்மன் கில், பின்னர் சிக்சர்களை விளாச தொடங்கினார். ஒரு கட்டத்தில் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினாலும், இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய கில் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
நடப்பாண்டில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் தற்போது மீண்டும் அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் தொடரிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.


Click it and Unblock the Notifications