மும்பை: இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்ட குஜராத் அணியின் யாஷ் தயாளை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடி வருபவர் யாஷ் தயாள். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவரை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தான் இந்த யாஷ் தயாள். ரிங்கு சிங் அடித்த சிக்சர்கள் ஐபிஎல் தொடருக்கே விளம்பரமாகி போனது.

இதையடுத்து காய்ச்சலால் உடல்நிலை மோசமாகி சில வாரங்கள் ஓய்வில் இருந்தார். இதன்பின்னர் மீண்டும் குஜராத் அணிக்காக சில போட்டிகளில் களமிறக்கப்பட்டார். சிறப்பாக ஆடினாலும் பிளே ஆப் சுற்றில் குஜராத் அணி யாஷ் தயாளை களமிறக்கவில்லை. இருப்பினும் இளம் வீரர் என்பதால், அடுத்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷ் தயாள் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. அதில், முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் லவ் ஜிகாத் என்று வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய யாஷ் தயாள், மன்னிக்கவும்.. அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன்.. வெறுப்பை பரப்ப வேண்டாம்.. அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் யாஷ் தயாளின் செல்போனில் எப்படி அந்த புகைப்படம் வந்தது, எதற்காக அப்படி பதிவிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே தி காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக யாஷ் தயாள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.