அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 215 ரன்களை குஜராத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. குஜராத் அணியின் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி மிரட்டியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதன் பின்னர் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாஹா தொடக்கம் கொடுத்தனர்.

இதில் 2வது ஓவரின் போது சுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சஹர் தவறவிட்டார். அதேபோல் தீபக் சஹர் பந்துவீச்சில் மீண்டும் அவரிடமே கொடுத்த கேட்சையும் தவறவிட்டார். இதனை பயன்படுத்தி அதிரடியாக ஆடிய இருவரும் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 62 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தை சாஹா கையில் எடுத்தார்.
சாய் சுதர்சனுடன் இணைந்து சாஹா அதிரடியாக ஆட, 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 86 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சிறப்பாக ஆடிய சாஹா 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாஹா ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியே களம் புகுந்தார். அனைவரும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடிக்கு காத்திருக்க, திடீரென தமிழக வீரர் சாய் சுதர்சன் விஸ்வரூபம் எடுத்தார். 33 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், துஷார் தேஷ்பாண்டே வீசிய 17வது ஓவரில் மட்டுமே 20 ரன்களை விளாசினார்.
இதனால் குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை குவித்தது. 18வது ஓவரில் பதிராணா வெறும் 9 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்க, 19வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே இரு சிக்சர் உட்பட 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். பின்னர் கடைசி ஓவரை வீச மீண்டும் பதிராணா வந்தார். அந்த ஓவரின் முதல் இரு பந்துகளை சிக்சர் அடிக்க, குஜராத் மைதானமே மொத்தமும் மிரண்டே போனது.
96 ரன்கள் எடுத்து நின்றிருந்த சாய் சுதர்சன் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதிராணா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த ஓவரில் மேலும் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.