வேகப்பந்துவீச்சாளர்களே எங்களின் குறி.. குஜராத் அணியின் தேவை அது மட்டுமே.. ஆஷிஷ் நெஹ்ரா ஓபன் டாக்!
மும்பை: நட்சத்திர வீரர் ஃபெர்குசனை விடுவித்துள்ளதால், குஜராத் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது என்று அந்த அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் கோப்பையை வென்று அசத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார்.
இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ளது.

குஜராத் அணி
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் மற்றும் லாக்கி ஃபெர்குசன் ஆகியோரை விடுவித்தனர். இதனால் குஜராத் அணிக்கு ஃபெர்குசனுக்கு சமமான வேகப்பந்துவீச்சாளரை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனால் குஜராத் அணி எந்த வீரரை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஷிஷ் நெஹ்ரா பேட்டி
இதுகுறித்து குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில், குஜராத் அணி கடந்த ஆண்டு கோப்பையை வென்றாலும், அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தில் தேவைக்கேற்ப வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் திட்டமிடுவர். அதையே தான் நாங்களும் செய்யப் போகிறோம்.

வேகப்பந்துவீச்சாளர் தேவை
எங்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை எழுந்துள்ளது. ஏராளமான வீரர்களை விடுவித்தாலும், அனைவருக்கும் சமமான வீரர்களை வாங்கப் போவதில்லை. நமக்கு தேவையான அனைத்து வீரர்களையும் எப்போதும் வாங்க முடியாது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் எங்களை தவிர்த்து 9 அணிகள் இருக்கிறார்கள். அதனால் உள்ளூர் வீரர்களுக்கு கூட அதிக தொகை கொடுக்க வேண்டிய நிலை வரும்.

கோப்பையை வெல்ல வேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்ல வேண்டும் என்றே வருகிறார்கள். யாரும் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என்று வரவில்லை. ஆனால் கோப்பையை ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். வெற்றிக்கும், தோல்விக்குமான சதவிகிதம் மிகவும் குறைவு தான்.

குர்பாஸ் சிறந்த வீரர்
ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் மிகச்சிறந்த வீரர். ஆனால் அவர் இப்போது கொல்கத்தா அணியில் இருக்கிறார். அதேபோல் பல்வேறு நாடுகளின் தேசிய அணிக்கு தலைமை தாங்கும் டி20 கேப்டன்கள் கூட ஐபிஎல் தொடரில் ஏலத்தில் வாங்கப்படாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications