அகமதாபாத்: சென்னை அணியின் தோல்விக்கு 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்திய ரஷீத் கானே முக்கிய காரணமாக அமைந்தார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 92 ரன்கள் சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டி வெற்றிபெற்றது. அந்த அணியின் சுப்மன் கில் 63 ரன்கள் சேர்த்தார். சென்னை அணி சார்பாக அறிமுக வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி தோல்வியை சந்தித்ததோடு, இதுவரை குஜராத் அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் தோல்வியை அடைந்துள்ளது. நேற்றையப் போட்டியில் கடைசி நேரத்தில் மோசமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னை அணியின் தோல்விக்கு முதல் அடியை கொடுத்தவர் ரஷீத் கான் தான்.
வழக்கத்திற்கு மாறாக முதல் போட்டியில் மிடில் பேட்டில் சிக்சர் விளாசிய ருதுராஜ் கெய்க்வாடால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் பவர் ப்ளே ஓவர்களுக்குள் ரஷீத் கான் கொண்டு வரப்பட்டார். விக்கெட் தேவை என்ற நேரத்தில் ஹர்திக் பாண்டியா ரஷீத் கானை பயன்படுத்த, அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ரஷீத் கான், தான் வீசிய முதல் ஓவரிலேயே மொயின் அலியை பெவிலியன் அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் இடதுகை பேட்ஸ்மேனான ஸ்டோக்ஸ் களத்திற்கு வர, உடனடியாக அடுத்த ஓவரையும் ரஷீத் கானிடம் வழங்கினார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரில் பென் ஸ்டோக்ஸை வழியனுப்பி வைக்க, ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குஜராத் அணியின் கைகளுக்குள் சென்றது. ஒருபக்கம் ருதுராஜ் அதிரடியாக ஆடினாலும் மறுபக்கம் கம்பெனி கொடுக்க கூட பேட்ஸ்மேன்கள் இல்லை. ராயுடு 12 பந்துகளுக்கு 12 ரன்களும், தூபே 18 பந்துகளுக்கு 19 ரன்களும் எடுக்க வைத்ததன் மூலம் குஜராத் அணி ரன் ரேட்டை கட்டுப்படுத்தியது.
அதற்கும் ரஷீத் கான் தான் காரணமாக இருந்தார். இறுதியாக ரஷீத் கான் 4 ஓவர்களை முடித்திருந்த போது, 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரது எகானமி 6.50 மட்டுமே இருந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நேற்றைய போட்டியில் பந்துவீசிய எந்த பந்துவீச்சாளருக்கும் எகானமி 6 ரன்களில் இல்லை என்பதுதான். அதுமட்டுமல்லாமல் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, முதல் பந்திலேயே சிக்சர் விளாசி சென்னை அணி ரசிகர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கினார்.

இதற்காக நேற்றைய விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஷீத் கானிற்கு ஆட்டநாயகன் விருதுடன், எம்விபி விருதும் வழங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை அணியின் தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டது ரஷீத் கான் என்பதும் அறிந்துகொள்ள முடியும். நேற்றையப் போட்டியில் சென்னை அணியின் ஒரு பந்துவீச்சாளர் 6 எகானமியில் பந்துவீசி இருந்தால் வெற்றி, சிஎஸ்கே பக்கமே இருந்திருக்கும். ஆனால் அப்படி பந்துவீச வீரர்கள் இல்லை. பேட்ஸ்மேன்கள் ஆட்டங்களை வென்று கொடுப்பார்கள், பந்துவீச்சாளர்கள் தொடரை வென்று கொடுப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் நேற்றையப் போட்டியில் ஆட்டத்தை வென்று கொடுத்ததே பந்துவீச்சாளர் தான்.