சிறையாக மாறும் சண்டீகர் கிரிக்கெட் மைதானம்.. போலீசார் குவிப்பு.. பஞ்சாப்பில் திடீர் பதற்றம் ஏன்?
சண்டிகர்: கபில் தேவ், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் தங்களை பட்டை தீட்டிக்கொண்ட பஞ்சாப் மாநிலம் சண்டீகரிலுள்ள செக்டார் 16 கிரிக்கெட் மைதானம் வரும் 25ம் தேதி தற்காலிக சிறையாக மாற்றப்பட உள்ளது.
ஏன் என்ற கேள்வி எழுகிறதா? தேரா சச்சா சவுதா அமைப்பின் குர்மீட் ராம் ரஹிம் சிங் ஆதரவாளர்கள் அன்றைய தினம் நகரில் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதும், அப்படி வருவோரை போலீசார் பிடித்து காவலில் வைக்கவும் இந்த மைதானம் பயன்படுத்தப்பட உள்ளதுதான், இதற்கு காரணம்.
15.32 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மைதானம் 20000 மக்களை ஒரே நேரத்தில் அமர வைக்க வசதியானது. உளவுத்துறை தகவல்படி 25ம் தேதி சுமார் 10 லட்சம் தேரா அமைப்பின் ஆதரவாளர்கள் சண்டிகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலாத்கார வழக்கில் தீர்ப்பு
ஏன் இத்தனை பேர் சண்டிகருக்கு வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? பன்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அன்றைய தினம்குர்மீட் ராம் ரஹிம் சிங்கிற்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளதுதான் இதற்கு காரணம்.

புகழை தட்டி சென்ற மொகாலி
சண்டிகர் மைதானம் முன்பு பெற்ற முக்கியத்துவத்தை, 1995க்கு பிறகு இழந்தது. இதற்கு காரணம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், மொகாலியில் அவ்வாண்டு மைதானத்தை அமைத்தது. சண்டிகர் மைதானத்தில் 1985ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டி நடந்தது. 1990ல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 2007 வரை 5 ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டன.

தடையுத்தரவு
கிரிக்கெட் மைதானத்தை தவிர சண்டிகரிலுள்ள பல பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தேரா ஆதரவாளர்களை அடைத்து வைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. நகரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3500க்கும் மேற்பட்ட போலீசார் நாளை மறுநாள் சண்டிகரில் பாதுகாப்புக்கு குவிக்கப்படுவார்கள்.

போலீசுக்கு விடுமுறை ரத்து
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் நடுவேயான எல்லை பகுதி சீல் வைக்கப்படுகிறது. இதுதவிர ஏழு கம்பெனி துணை ராணுவத்தினர் குவிக்கப்பட உள்ளனர். அனைத்து போலீசாரும் தங்கள் விடுமுறைகளை ரத்து செய்துள்ளனர். ஆகஸ்ட் 31ம் தேதிவரை யாருக்குமே விடுமுறை கிடையாது என காவல்துறை தலைமை அறிவித்துள்ளது.

கூடுதல் பாதுகாப்பு
மாநில ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு வெளியே கூடுதலாக போலீசாரை குவிக்க பஞ்சாப் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக பஞ்சாப் மாநிலம் முழுக்க பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications