ஐபிஎல் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துடுச்சு... அதனாலதான் சிஎஸ்கேவை விட்டு வெளியே வர்றேன்... ஹர்பஜன்
சென்னை : ஐபிஎல்லில் கடந்த 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவந்த ஹர்பஜன் சிங் தற்போது இந்த சீசனில் விடுவிக்கப்பட உள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல்லில் சிஎஸ்கேவுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், இரண்டு அழகான ஆண்டுகளை தான் சிஎஸ்கேவில் செலவிட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

160 போட்டிகளில் ஆட்டம்
ஐபிஎல்லில் இதுவரை 160 மேட்ச்களில் விளையாடியுள்ள ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2018 முதல் சிஎஸ்கேவிற்காக விளையாடி வந்தார் ஹர்பஜன். இந்நிலையில் தனது சொந்த காரணங்களால் கடந்த ஆண்டு யூஏஇயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்பினார்.

சிஎஸ்கேவில் இருந்து விடுவிப்பு
இதனிடையே, அவர் சிஎஸ்கேவிலிருந்து இந்த சீசனில் விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களை தக்க வைப்பது குறித்த இறுதி முடிவை நாளைக்குள் 8 ஐபிஎல் அணிகளும் மேற்கொள்ள பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. அடுத்த மாதம் ஐபிஎல் 2021 ஏலம் சிறிய அளவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த அனுபவம்
இந்நிலையில் 2 ஆண்டுகள் சிஎஸ்கேவிற்காக விளையாடியது மிகச்சிறந்த அனுபவம் என்று ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவுடனான தனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு ஆண்டுகள் சிறப்பான நினைவுகளையும் சிறந்த நண்பர்களையும் தனக்கு தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நினைவில் நீங்காது
இந்த 2 ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் நினைவுகளை தான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன் என்றும் சிஎஸ்கே நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் சிஎஸ்கேவிற்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications