டோமினிக்கா: அண்மையில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இனி கிரிக்கெட் விளையாடுவதற்காக ஒவ்வொரு முறையும் என் ஷூ-வை அணியும் போதும், பந்துவீச்சாளராக உருவாக விரும்பியதற்கான காரணத்தை நினைத்து கவலை கொள்வேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தமாக 12 வீழ்த்தி ஏராளமான சாதனையை தகர்த்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8 முறை வீழ்த்தியுள்ள அனில் கும்ப்ளேவின் சாதனைகளை சமன் செய்தார். அதேபோல் ஒரே போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 6வது முறையாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் வீழ்த்திய 707 விக்கெட்டுகளை, ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். இதன் மூலம் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். இந்த சாதனை குறித்து அஸ்வின் பேசுகையில், இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் எப்போதும் என் ஹீரோ தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் தனியாளாக வெற்றியை தேடி கொடுத்தார்.
2001ஆம் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பற்றிய நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. சிறு வயது முதலே அவரின் பவுலிங் ஆக்ஷனை ஏராளமான முறை காப்பியடிக்க முயன்றிருக்கிறேன். அப்படியான ஜாம்பவான் வீரருக்கு மத்தியில் எனது பெயரும் இருப்பது பெருமையாக உள்ளது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த சாதனையை படைத்த அஸ்வினுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.