
சாஹல்
இதே ஐக்கிய அமீரகத்தில் இன்னும் சில வாரங்களில் டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் தற்போது ஐக்கிய அமீரகத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாஹல் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. கடந்த 4 ஆண்டுகளாகவே ஒரு நாள் மற்று டி20 போட்டிகளில் சாஹல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் போதிலும், உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ராகுல் சாஹருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங்
இந்நிலையில், தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலையும் சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், "சாஹல் அணியில் தனது இடத்தை மீண்டும் பெற வேண்டும் என்றால் சீரான வேகத்தில் அவர் பந்து வீச வேண்டும். டி 20 உலகக் கோப்பையில் சாஹலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றே நாம் நம்புகிறேன். உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன் அணி மாற்றப்படலாம்.

மாற்றம் வேண்டாம்
நாம் எப்போதும் நம்மால் முடிந்தவரைச் சிறப்பான பங்களிப்பைத் தர வேண்டும். சரியான வேகத்தில் பந்துகளைச் சீரான வீச வேண்டும். அதற்காக மிகவும் மெதுவாகவும் பந்துகளை வீசக் கூடாது. டி 20 உலகக் கோப்பையில் சாஹலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களும் இந்திய அணியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் கடைசி நேரத்தில் அணியை மாற்றினால் அதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்று தெரிவித்தனர்.

அஜித் அகர்கர்
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் கூறுகையில், "என்னைக் கேட்டால் நீங்கள் உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். அதில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே அணியை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதில் எந்தவொரு மாற்றத்தைச் செய்யக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தற்போது சிறந்த ஃபார்மில் இல்லாத சிலரும் இருக்கின்றனர். ஆனால் ஃபார்மை மாற்ற ஒரே ஒரு இன்னிங்ஸ் போதும். பவுலிங் அல்லது பேட்டிங் என எதுவானாலும் சரி ஐபிஎல் முடிவதற்கு முன்பே அனைத்து வீரர்களும் ஃபார்முக்கு திரும்பலாம்.

மோசமான ஃபார்ம்
உலகக் கோப்பைக்கு நீங்கள் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளீர்கள் என்று நினைத்தால் அதை நீங்கள் மாற்றக் கூடாது. இப்போது ஐபிஎல் தொடரில் சிலரது ஃபார்ம் திருப்திகரமாக இல்லை என்றாலும் கூட நாம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், ஏனென்றால் இதுபோன்ற விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்" என்று அவர் தெரிவித்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications











