மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அனுபவ வீரர் புஜாரா நீக்கப்பட்டது மிகவும் தவறான விஷயம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை டொமினிக்காவில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் புஜாராவுக்கு பதில் ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், புஜாரா மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது.

இந்திய அணியில் பாராட்டப்படாத ஹீரோவாக விளங்கி இருக்கிறார். இந்திய அணியின் பலமாகவும் ஒரு தூணாகவும் விளங்கும் புஜாரா பேட்டிங்கில் விக்கெட்டுகள் விழாமல் விளையாடி மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். புஜாராவுக்கு நாம் இன்னும் அதிகம் மரியாதை கொடுக்க வேண்டும்.
அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. புஜாரா மட்டுமா டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்காமல் இருக்கிறார். அவரைப் போலவே நிறைய பேட்ஸ்மேன்களும் ரன் அடிக்காமல் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்கள். புஜாராவின் சராசரியும் மற்றவர்கள் சராசரியும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டிரைக் ரேட் குறித்து பேசுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் அப்படித்தான் விளையாட வேண்டும். அப்போதுதான் விக்கெட்டுகள் விழாமல் இருக்க முடியும். இது போன்ற ஒரு வீரர் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது அவசியம். வெளிநாடுகளில் சென்று விளையாட தொடங்கினால் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு தேவை இருக்காது. சாதாரண டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் புஜாரா போன்ற ஒரு வீரர் தான் உங்களுக்கு தேவை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் கோலியின் சராசரி 32.13 ஆகவும் புஜாராவின் சராசரி 32 ஆகவும் இருந்தது. இதில் புஜாராவை மட்டும் நீக்கிவிட்டு கோலியை அணியில் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்பதை மறைமுகமாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டிஸ் தொடர் விராட் கோலிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் கூட அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.