மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல இளம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏழ்மையால் கஷ்டப்பட்டு வாழ்ந்த பல இளைஞர்கள் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றதன் மூலம் தற்போது புகழின் உச்சத்துக்கு சென்றது மட்டுமல்லாமல் செல்வந்தர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.
ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் களமிறங்கி 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. முதன்முதலாக 2015 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியால் 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதிலிருந்து இன்று வரை ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை உச்சத்தில் சென்றது.

10 லட்சத்தில் ஆரம்பித்த ஹர்திக் பாண்டியாவின் ஐபிஎல் வாழ்க்கை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக 16 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவதற்கு முன்பு பரோடாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். முன்பெல்லாம் டென்னிஸ் பந்தில் பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
இதில் பல வீரர்கள் விளையாடுவார்கள். குஜராத்தில் ஹர்திக் பாண்டியா இப்படி கிரிக்கெட் போட்டியில் விளையாடி தான் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா அப்படி ஒரு தொடரில் விளையாடும்போது அவருக்கு தினமும் 400 ரூபாய் ஊதியமாக ஒருவர் வழங்கி இருக்கிறார். அது அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா கிரிக்கெட்டில் உச்சம் தொட்டு இருக்கும் நிலையில் தமக்கு சம்பளம் வழங்கிய அந்த நபரை கண்டுபிடித்து வீடியோ காலில் போன் செய்து பேசி இருக்கிறார். அப்போது நீங்கள் கொடுத்த அந்த 400- 500 ரூபாய் தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது. நீங்கள் தந்த பணம் எனக்கு அப்போது உறுதுணையாக இருந்தது.
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு மிகவும் நன்றி என்று அவர் பேசி இருக்கிறார். இவ்வளவு உச்சத்திற்கு சென்ற பிறகும் ஹர்திக் பாண்டியா பழையதை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டு நன்றி உணர்வுடன் இருக்கிறார்.ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல் அந்த நபரை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.