
பாகிஸ்தான் தடுமாற்றம்
முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் அபாரமாக வீசி பாகிஸ்தானுக்கு திகிலை கொடுத்தார். முகமது ரிஸ்வான் டிஎர்எஸ் உதவியால் முதல் ஓவரில் காப்பற்றப்பட்டார். இதனையடுத்து புவனேஸ்வர் குமார் வீசிய ஷாட் பாலை அடிக்க முயன்ற பாபர் அசாம் , 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் 15 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து ஃபக்கர் ஷமானும் அதிரடியாக ஆட முற்பட ஆவேஷ் கான் வீசிய ஷாட் பந்தில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

147 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
ரிஸ்வானும், இஃப்திகார் அகமதும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். இருப்பினும் ஹர்திக் பாண்டியா வீசிய ஷாட் பந்தில் இருவரும் ஆட்டமிழந்தனர். இதனால் 97 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டை பாகிஸ்தான் தடுமாறியது. இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆசிஃப் அலி 9 ரன்களில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். கடைசி 2 ஓவரில் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் எடுத்தது. தஹானி 2 சிக்சர் விளாச, அந்த அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ராகுல் கோல்டன் டக்
டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேஎல் ராகுல் கோல்டன் டக் ஆனார்.

ரோகித் அவுட்
இதனையடுத்து, ரோகித் சர்மாவும் விராட் கோலியும் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிக்சர் அடிக்க முற்பட்டு ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் தான் களமிறங்க வேண்டும். ஆனால் 7வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஜடேஜாவுக்கு 4வது இடத்திற்கு ராகுல் டிராவிட் புரோமோஷன் வழங்கினார்.

ஹர்திக் அபாரம்
நிதானமாக விளையாடிய கோலி 35 ரன்கள் எடுத்து முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் 18 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஜோடி பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்டியா 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை விரைட்டினார்.

இந்தியாவுக்கு சாதகமான விதி
கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜடேஜா 35 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சர் விளாச, இந்திய அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக, பவுண்டரி லைனில் ஒரு ஃபில்டர் ஐசிசியின் புதிய விதிப்படி குறைக்கப்பட்டார். இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











