சிஎஸ்கே இல்லை.. மும்பை இந்தியன்ஸ்-ஐ விட்டு வேறு ஐபிஎல் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக வாய்ப்பு
மும்பை: 2027 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அஜின்கியா ரஹானே அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு கொண்டு வர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பத்திரிகையாளர் ரோஹித் ஜுக்லான் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஹர்திக் பாண்டியா கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்க முயன்றதாகக் கூறப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி அதற்குப் பதிலாக சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரைக் கேட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சிஎஸ்கே அணி முக்கிய வீரர்களை தர முன்வரவில்லை.
அதே சமயம், கொல்கத்தா அணியும் ஹர்திக் பாண்டியாவைக் கேட்க, மும்பை இந்தியன்ஸ் அணி அதற்குப் பதிலாக ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் அல்லது ரமன்தீப் சிங் ஆகியோரைக் கேட்டது. தங்களின் முக்கிய வீரர்களை விட்டுத்தர கொல்கத்தா மறுத்ததால் இந்த வர்த்தகம் முதலில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது கேமரூன் கிரீனை மும்பை அணிக்கு வர்த்தகம் செய்து ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா அணி வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து விலகினால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தற்போது சரியான ஃபார்மில் இல்லாததால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications
