ஐபிஎல் வெளிச்சம்
தற்போது இந்திய அணியின் ஹர்திக் பண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பண்டியா, ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர்கள் தான்.
மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணியால் பட்டை தீட்டப்பட்ட இருவரும், இந்திய அணியில் இடம் பெற்றனர். அதிலும் ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக அணியின் முக்கிய ஆல் - ரவுண்டராக வலம் வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த போராட்டம் பற்றி கூறினார்.
பரோடா அணியில் ஆடினார்
இளமைக் காலத்தில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற ஹர்திக் பண்டியா, பரோடா அணிக்காக அண்டர் 16, அண்டர் 19 போன்ற அணிகளில் ஆடி வந்தார். அப்போது அவரது தந்தை மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்.
ஹார்ட் அட்டாக்
எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்த போது அவரது தந்தைக்கு "ஹார்ட் அட்டாக்" ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் வேலையை விட வேண்டிய சூழ்நிலை உருவானது.
கிரிக்கெட் வருமானம்
அப்போது ஹர்திக் மற்றும் க்ருனால் இருவரும் அண்டர் 17 , அண்டர் 19 அணிகளில் இடம் பெற்று வந்தனர். அதன் மூலம் அவர்களுக்கு வருடத்திற்கு 35,000 ரூபாய் கிடைக்கும். அதை வைத்துத் தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை.
இடத்தை இழந்தனர்
ஆனால், அந்த சமயத்தில் க்ருனால் பண்டியா அணியில் தன் இடத்தை இழந்தார். ஹர்திக் பண்டியா, பயிற்சியாளருடனான சிறிய கருத்து வேறுபாட்டால் அண்டர் 17 அணியில் தன் இடத்தை இழந்தார்.
கடும் சிக்கல்
அவர்கள் கிரிக்கெட் ஆடி கிடைக்கும் 35,000 ரூபாயை வைத்து இரண்டு மாதங்கள் செலவுகளை சமாளிக்கலாம். ஆனால், அதற்கும் வழி இல்லாமல் போனது. அப்போது தான் தன் மனதை மாற்றிக் கொண்டு கிரிக்கெட்டுக்காக கடுமையாக உழைத்ததாக கூறி இருக்கிறார் ஹர்திக்.
கடும் உழைப்பு
நல்ல வாழ்க்கை இருந்தது. ஆனால், திடீரென எல்லாமே ஒருநாள் போய்விட்டது. அதனால், பண்டியா ஒரு சிறப்பான வாழ்க்கை வேண்டும் என்றால் கிரிக்கெட்டில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
கிரிக்கெட்டில் கவனம்
தனது 17 வயது முதல் 19 வயது வரை, சுமார் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தினார் ஹர்திக். கிரிக்கெட்டில் மட்டுமே அவருக்கு நண்பர்கள் இருந்துள்ளனர். அதைத் தாண்டி யாருடனும் அவர் பேசவில்லை.
இலக்கை எட்டினார்
வெளி உலகத்துடனான தொடர்பை அவர் விடுவித்துக் கொண்டார். அது தன் இலக்கை அடைவதை தடுக்கும் என அவர் நினைத்தார். அந்த போராட்டம் தான் ஹர்திக் பண்டியாவை இன்று அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாற்றி உள்ளது.