மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றதற்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி நிலவி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு 38 வயது ஆகும் நிலையில் அவர் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. நிச்சயமாக அவருக்கு அடுத்த தலைமுறை அணியை உருவாக்க வேண்டும், அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது.

அது குறித்து கபில் தேவிடம் மைகேல் (MyKhel) இணையதளம் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா தான் இந்திய வெள்ளை பந்து அணியின் கேப்டனாக இருக்க வேண்டும். அந்த பதவிக்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாண்டியா தான் என்னுடைய தேர்வு" என்றார்.
"ஹர்திக் பாண்டியா மிகவும் இளம் வயது உடையவராக இருக்கிறார். அடுத்து வரும் ஐசிசி தொடர்களுக்கான அணியை அவரால் கட்டமைக்க முடியும். ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அதனால் இந்திய அணி மூன்று விதமான கிரிக்கெட் அணிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என்றும் சுட்டிக்காட்டினார் கபில் தேவ்.
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவே இருக்கிறார். ஆனால் 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம் பெறுவாரா, அப்படியே இடம் பெற்றாலும் கேப்டனாக நீடிப்பாரா? என்ற கேள்விகள் உள்ளன.
நிச்சயமாக ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே பிசிசிஐ வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம்.