மும்பை: உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சி பொறுப்பையும் ஹர்திக் பாண்டியாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் என்று இந்திய அணியின் ஜாம்பவான்கள் எப்படி ஒவ்வொருவராக ஓய்வை அறிவித்தார்களோ, அதேபோல் மீண்டும் இந்திய அணி ஒரு நிலைக்கு சென்றுள்ளது. இந்திய அணியின் புஜாரா, ரோகித் சர்மா, அஜிங்கியா ரஹானே, முகமது ஷமி, அஸ்வின் உள்ளிட்டோர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதனால் அவர்களுக்கு மாற்றான இளம் வீரர்களை தயார்ப்படுத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்கேற்ப டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் அடையாள காணப்பட்டு களமிறக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கங்குலி பேசுகையில், ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இதனால் மீண்டும் பாண்டியாவை வெள்ளை ஜெர்சியில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் சவுரவ் கங்குலியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துகளை கூறியுள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவின் உடல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருந்தால், கேப்டன்சியை வழங்க வேண்டும்.
அதேபோல் சீனியர் வீரர்கள் தங்களின் கடைசி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இளம் வீரர்கள் களமிறங்க தயாராகிவிட்டார்கள். டி20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்களின் நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது. உலகக்கோப்பைக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கு வாய்ப்புகள் முடிவுக்கு வரும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.