
20வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 20வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. போட்டி டிரா ஆன நிலையில், தொடரின் முதல் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 ரன்கள் என்ற சன்ரைசர்ஸ் அணியின் எளிதான இலக்கை சிறப்பாக பூர்த்தி செய்து வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் விளக்கம்
இந்நிலையில் நேற்றைய போட்டியின் தோல்வியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், அணியில் மணீஷ் பாண்டே இடம்பெறாதது தேர்வாளர்களிடம் கடினமான முடிவு என்று தெரிவித்திருந்தார். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மணீஷ் பாண்டே நேற்றைய போட்டியில் இல்லாத நிலையில் வார்னரின் இந்த கமெண்ட் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடினமான பிட்ச்
மணீஷ் பாண்டேவிற்கு பதிலாக நேற்றைய தினம் விளையாடிய விராட் சிங், 14 பந்துகளை விளையாடி 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரால் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்சிற்கு விளையாட முடியவில்லை. இந்நிலையில் அவர் சிறப்பான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நேற்றைய தினம் அவர் கடினமாக உணர்ந்ததாகவும் வார்னர் கூறியுள்ளார்.

பாண்டே குறித்த விளக்கம்
மேலும் மிடில் ஆர்டரில் டெல்லி கேபிடல்ஸ் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதாகவும் அது மிகப்பெரிய சவாலாக அமைந்ததாகவும் வார்னர் கூறினார். இதனிடையே வார்னர் தேர்வாளர்கள் என்று யாரை குறிப்பிட்டார் என்பது கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வாளர் யார்?
அணியில் கிரிக்கெட் டைரக்டர் டாம் மூடி, தலைமை கோச் ட்ரெவர் பேலிஸ், துணை கோச் பிராட் ஹாடின், பேட்டிங் வழிகாட்டி விவிஎஸ் லஷ்மன் மற்றும் பௌலிங் வழிகாட்டி முத்தையா முரளிதரன் ஆகியோர் உள்ள நிலையில் டேவிட் வார்னர் குறிப்பிட்ட தேர்வாளர் யார் என்பது விடை காண முடியாத கேள்வியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











