மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி தனது பேஸ்புக் புரொபைல் படத்தை மாற்றியுள்ளார். தனது புதிய படத்தில் மகள் மற்றும் மனைவியுடன் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் டோணி.
உலகக் கோப்பை போட்டிகளுக்காக டோணி ஆஸ்திரேலியா சென்றிருந்த போது, அவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
டோணியின் குழந்தை புகைப்படத்தை வெளியிட ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டின. ஆனால், டோணியின் மனைவி சாக்ஷி, குழந்தையின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
இதற்கிடையே டோணி மற்றும் அவரது மனைவி வெவ்வேறு சமயங்களில் தூக்கி வைத்திருந்த மற்றக் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாயின. இது தான் டோணியின் மகள் என்ற செய்தியும் பரவியது. ஆனால், அது தங்களது குழந்தை இல்லை என சாக்ஷி மறுப்புச் செய்தி வெளியிட்டார்.
இந்தியா திரும்பிய டோணி, தனது மகளோடு வெளியே வந்த பொழுதுகளில், மற்றவர்கள் தனது மகளை புகைப்படம் எடுத்து விடாதபடி கவனமாகச் செயல்பட்டார். ஆனபோதும், அவரைச் சுற்றி சுற்றி வந்து குழந்தையின் புகைப்படத்தை எடுத்தார்கள் செய்தியாளர்கள்.
பின்னர், இது தான் டோணியின் மகள் புகைப்படம் என இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாக பரவியது.
இதனால், ஐபிஎல் போட்டிகளுக்காக பயணம் மேற்கொண்ட டோணி, சென்னை மற்றும் மும்பை விமான நிலையங்களில் தனது இரண்டு மாத கைக்குழந்தை ஷீவாவின் முகத்தை அனைவரும் பார்க்கும்படி கையில் வைத்திருந்தார் டோணி.
இந்நிலையில், டோணி தனது பேஸ்புக் பக்கத்தில் மகள் மற்றும் மனைவியோடு இருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.