ஹைதராபாத்:இறுதிப்போட்டியின் 20வது ஓவரால் எனது இதயம் நொறுங்கி விட்டது என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
ஆக சிறந்த போட்டியாக மாறிய ஐபிஎல் பைனல் குறித்த பேச்சுகளும், புலம்பல்களும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சென்னையின் தோல்வியை ஏற்காத ரசிகர்கள்.. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. புலம்பல்களும், ஆவேசங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

ரசிகர்கள் போன்று சென்னை அணியின் வீரர்களும் நொறுங்கி தான் போனார்கள். 20வது ஓவரில் விழுந்த அந்த விக்கெட்டை பார்த்து அதிர்ச்சியான ஹர்பஜன் சிங், அடுத்த கணமே கையில் வைத்திருந்த பேட்டை ஓங்கி அடித்த காட்சி, டிவியில் திரும்ப, திரும்ப ஒளிபரப்பப்பட்டன.
அதே விரக்தியுடன் காணப்பட்ட ஹர்பஜன் சிங்... டுவிட்டரில் தமது இதயம் நொறுங்கி விட்டது என்று டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். வழக்கமாக தமிழில் பதிவிடும் அவர், இந்த முறை ஆங்கிலத்திலும் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் ஆங்கில பதிவில் கூறியிருப்பதாவது: நேற்றைய போட்டியின் முடிவு... எங்கள் அனைவரின் இதயத்தை நொறுக்கிவிட்டது. எனக்கு இதை தவிர வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தொடர் முழுவதும் ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. சாம்பியனான மும்பைக்கு வாழ்த்துகள். எப்படி தோற்றோம் என்பதே எங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஹர்பஜன் கூறியிருப்பதாவது: தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளயாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.