லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருப்பது இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஆட்டம் இழந்த முறை தான்ம் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.
இந்த நிலையில் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது போலாந்த் வீசிய பந்தைத் தொட்டு கேமரூன் கிரினிடம் பிடிபட்டார். ஆனால் கிரீன் பாய்ந்து பந்தை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டது. ஆனால் கை விரல் பந்திற்கு அடியில் இருப்பதாக கூறி மூன்றாம் நடுவர் அதனை அவுட் என்று அறிவித்தார்.

இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. பந்து தரையில் பட்ட போது அதனை எப்படி அவுட்டு கொடுக்கலாம் என ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எம் சி சி 33.3 விதியின்படி பந்து பில்டரிடம் வரும்போது அவர் கேட்ச் பிடித்திருந்தால் கைவிரல்கள் பந்தை வெளியே செல்லாதபடி வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது அவுட்டு தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று 33.2.2.1 விதியின்படி பந்தை நேரடியாக ஃபீல்டர் கேட்ச் பிடித்த பிறகு பந்தின் ஒரு பகுதி தரையில் பட்டாலும் அது நாட் அவுட் கிடையாது என்றும் ஐசிசி விதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை வைத்து தான் மூன்றாம் நடுவர் ரிச்சர்ட் கிட்டல்ப்ரோ, சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐசிசி விதியின்படி கேமரூன் கிரீன் பந்தை கீழே விழாமல் பிடித்திருந்ததாகவும், இரண்டு விரல்களுக்கு நடுவில் இருந்த பந்தின் பகுதி தான் தரையில் பட்டதாகவும் இதனால் இது அவுட்டு தான் என்றும் ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத இந்திய ரசிகர்கள் பந்து கீழே பட்டதால் தான் பந்து அவரின் கையை விட்டு செல்லவில்லை என்றும் இது தவறான முடிவு தான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பு கள நடுவர் கையால் அவுட்டா இல்லையா என்று செய்கையை(soft signal) காட்டுவார். அதன் பிறகு தான் மூன்றாம் நடுவர் முடிவு எடுப்பார். இந்த ஆட்டத்தில் இருந்து அந்த முறையை ஐசிசி நீக்கியது குறிப்பிடத்தக்கது.