மும்பை: மும்பை வாங்கடே மைதானத்தில் ஏப்ரல் 9ம் தேதி 9வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று பாம்பே உயர்நீதிமன்றம் இன்று அனுமதித்து உத்தரவிட்டது.
ஏப்ரல் 9ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், டோணி தலைமையிலான புனே ரைசிங் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி, தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள 19 போட்டிகளையும் இங்கு நடத்தக் கூடாது. வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றினால் என்ன என்று பிசிசிஐ மற்றும் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு கேள்வி விடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதல் போட்டியை மட்டும் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ம் தேதி வாங்கடே ஸ்டேடியத்தில் நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற போட்டிகள் குறித்து ஏப்ரல் 12ம் தேதி முடிவு செய்யப்படும என்று நீதிமன்றம் அறிவித்தது.