மும்பை: ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் போது ரோகித் சர்மா பேசுகையில், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவின் ரோலில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால், அணியின் பேலன்ஸ் சீராக இருக்கும். ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையில் விளையாடப்பட உள்ளதால், எவ்வித சாதகமும் இந்திய அணிக்கு இல்லை.

அதேபோல் அண்டர் டாக்ஸ் என்றும், கோப்பையை வெல்லும் அணி என்றும் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை ஒரு தொடருக்காக ஒரு அணி எப்படி தயாராகிறது என்பதும், அழுத்தமான சூழல்களில் எப்படி செயல்படுகிறது என்பதும் தான் முக்கியம். அதனை ஒரு அணியாக இணைந்து சிறப்பாக செய்ய விரும்புகிறேன்.
இந்திய அணியில் நம்பர் 4ல் விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை டாப் 3க்கு கீழ் விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களாலும் நம்பர் 4 பேட்ஸ்மேனாக தான் இருக்கிறார்கள். ஏனென்றால் காயமடைந்த வீரர்கள், ஓய்வு கொடுக்கப்பட்ட வீரர்கள் என்று பலரும் நம்பர் 4ல் விளையாடி இருக்கிறார்கள். உலகக்கோப்பைத் தொடருக்கு முன் 9 ஆட்டங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு இந்திய அணியின் காம்பினேஷன் தெரிந்துவிடும்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய அணியில் ஏராளமான பேட்ஸ்மேன்களால் பந்துவீச முடிந்தது. ஆனால் தற்போதைய வீரர்களை வைத்தே திட்டமிட வேண்டிய சூழல் இருக்கிறது. யாராலும் ஒருநாள் இரவில் பந்துவீச்சாளராக மாற்றிட முடியாது. நல்ல விஷயம் என்னாவென்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியால் பந்துவீச முடியும் என்று கிண்டலாக கூறினார்.
அதேபோல், கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் அனைத்து வீரர்களும் அனைத்து இடங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்றே கூறி வருகிறோம். அதற்கேற்ப திட்டமிட்டு விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.