லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், இந்திய ரசிகர்களின் நம்பிக்கையையும் ஆஸ்திரேலிய அணி தகர்த்துள்ளது. எப்படி விராட் கோலியின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்கள் கைப்பற்றினார்கள் என்பதை பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் 5வது நாள் ஆட்டத்தில் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி - ரஹானே இருவரும் களத்தில் இருந்தனர். இதனால் 10 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி நிச்சயமாக ஐசிசி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதேபோல் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினாலே வெல்லலாம் என்பதால், சரியான திட்டத்துடன் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே டிஃபென்சிவ் மனநிலையில் ஃபீல்டிங்கை அமைத்திருந்தது. குறிப்பாக விராட் கோலி பேட்டிங் செய்கையில் டீப் பாய்ண்ட், டீப் ஸ்கொயர் லெக் மற்றும் டீம் ஃபைன் லைக் திசையில் ஃபீல்டர்கள் நிறுத்தியது. இதனால் பவுண்டரிகளை நிறுத்தலாம் என்று கணக்கிடப்பட்டது.
ஆனால் 49 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி அரைசதம் அடிக்கும் அவசரத்தில் இருந்தார். இதனை சரியாக கணக்கிட்டு கவர்ஸ் திசையில் உள்ள ஃபீல்டரையும் ஆஸ்திரேலியா மாற்றியது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் போலாந்த் சரியான 4வது ஸ்டம்ப் லைனில் பந்துவீசினார். இதனை கணிக்காமல் விராட் கோலி பவுண்டரி அடிக்க முயல, அது ஸ்லிப்பில் கேட்ச்சானது.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் விராட் கோலியை கவர்ஸ் திசையில் ஆட வைக்க வேண்டும் என்ற திட்டத்துடனே ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. ஒருவேளை விராட் கோலி பவுண்டரிக்கு முயற்சித்தாலும், அதனை தடுக்கவும் தைரியமாக ஃபீல்ட் செட்டை அமைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் வலையில் விராட் கோலி சரியாக சிக்கி இந்திய அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் விரக்தியில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.