டாஸ் வென்றது
சென்னை அணியின் கேப்டன் டோணி மஞ்சள் உடையில் உள்ளே வந்தவுடன் ரசிகர்கள் கோஷமிட தொடங்கினார்கள். யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மும்பையில் சென்னை அணிக்குத்தான் அதிக ரசிகர்கள் ஆதரவு கொடுத்தார்கள். டாஸ் வென்ற டோணி, முதலில் சென்னை அணி பவுலிங் போடும் என்று தேர்வு செய்தார். சென்னை அணியில் பெரும்பாலும் இளம் வீரர்கள் சேர்க்கப்படாமல், ஹர்பஜன், தாஹிர் போன்ற அனுபவமான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மும்பை ஆரம்பம்
மும்பை அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே 15 ரன்னில் வாட்சன் பந்தில் அம்பதி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த சில நிமிடத்தில் இவான் லெவிஸ் சாஹர் பந்தில் டக் அவுட் ஆனார். ஆனால் அதற்கு அடுத்து மும்பை அணி சுதாரிக்க தொடங்கியது. இஷான் கிஷான், சூர்யா குமார் யாதவ் என்று இரண்டு இளம் வீரர்கள் சென்னை வீரர்களின் பந்தை பறக்க விட்டார்கள்.
கடைசி நேர இலக்கு
இவர்களின் அதிரடியால் மும்பை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சூர்யா குமார் யாதவ் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 29 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய பாண்டிய சகோதரர்களும் அதிரடியாக ஆடினார்கள். குருனாள் பாண்டியா 22 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 20 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு மும்பை 165 ரன்கள் எடுத்தது.
மோசமான தொடக்கம்
தொடக்கத்திலேயே வாட்சன் அதிரடியாக ஆட முடிவெடுத்தார். ஆனால் 16 ரன்களுக்கு பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 22 ரன்கள் எடுத்து இருந்த அம்பதி ராயுடுவும் அவுட் ஆனார். அதன்பின் வரிசையாக ரெய்னா, டோணி , ஜடேஜா என்று எல்லோரும் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். போதாக்குறைக்கு கேதார் ஜாதவ் ரிட்டையர் ஹர்ட் ஆனார். இதனால் சென்னை அணி தோற்று போக போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது.
அதிரடி
ஆனால் அப்போதுதான் பிராவோ களமிறங்கினார். ஆனால் பிராவோவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் நிதானமாக ஆடினார். 17 ஓவர் வரை அவர் எந்த விதமான அதிரடியையும் காட்டவில்லை. ஆனால் 17வது ஓவரில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியின் போக்கு மாற ஆரம்பித்தது. சிக்ஸ், பவுண்டரி, சிக்ஸ் என்று சிங்கிள் எடுக்காமல் அதிரடியாக ஆடினார் பிராவோ.
வேங்கைமகன்
அதுவரை சோகமாக இருந்த சென்னை அணி வீரர்கள் சந்தோசமாக தொடங்கினார்கள். இந்த நிலையில் 19 வது ஓவரில் வரிசையாக சிக்ஸ் அடித்துக் கொண்டு வந்த பிராவோ 7 சிக்ஸ் 3 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கடைசியில் கைவசம் ஒரு விக்கெட், கடைசி ஓவரில் 7 ரன்கள் என்ற பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.
2 வருட கனவு
அப்போதுதான் ரிட்டையர் ஹர்ட் ஆகி இருந்த கேதார் ஜாதவ் மீண்டும் களத்திற்கு வந்தார். ஆனால் கையில் அடிப்பட்டு இருந்த அவர், முதல் மூன்று பந்துகளை வேண்டுமென்றே மெதுவாக அடித்து ரன் எடுக்காமல் இருந்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தை ரிவர்ஸ் ஷாட் மூலம் சிக்ஸாக மாற்றினார் கேதார். அதற்கு அடுத்த பந்திலேயே சிங்கிள் எடுத்து சென்னை அணிக்கு இரண்டு வருடத்திற்கு பின் வெற்றியை தேடிக்கொடுத்தார். பிராவோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.