அணியில் யாரும் எடுக்கவில்லை
இந்த ஐபிஎல் போட்டிக்கு முன் ஏலத்தின் போது, கிறிஸ் கெயிலை யாருமே அணியில் எடுக்கவில்லை. பெங்களூரு அணி அவரை கைவிட்டது. கடைசி நாளில், அதுவும் கடைசி நேரத்தில்தான் இவர் பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டார். அதுவும் 2 கோடி கொடுத்து கெயில் ஏலம் எடுக்கப்பட்டார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கிந்திய தீவிலும் மரியாதை இல்லை
அதேபோல் அவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியிலும் சரியான மரியாதை இல்லை. கெயிலை மிகவும் மோசமாக அந்த அணி நிர்வாகம் அவமானப்படுத்தியது. சரியாக சம்பளம் கூட கொடுக்காமல் பிரச்சனை செய்தது. நன்றாக இருந்த பேட்ஸ்மேனை பார்ம் அவுட் என்று கூறி சண்டையிட்டது. இது அவருக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது.
பஞ்சாப் அணியிலும் இல்லை
அதேபோல் பஞ்சாப் அணியிலும் அவருக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டியில் அவரை அணி நிர்வாகம் இறக்கவேயில்லை. பேட்டிங் பயிற்சியாளர் போல் செயல்பட்டு வந்தார். கடைசி நேரத்தில்தான் இரண்டு போட்டிக்கு பின் அவர் சென்னைக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.
சூப்பர் அதிரடி
இந்த நிலையில் பல தடைகளுக்கு பின் இவர் அணிக்கு திரும்பி உள்ளார். இதோ சென்னைக்கு எதிராக போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். 33 பந்துகள் பிடித்த அவர் 63 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சிக்ஸர்கள் அடக்கம். இந்த ஆட்டம்தான் சென்னை அணியின் முதல் ஐபிஎல் 2018 தோல்விக்கு காரணமாக இருந்தது.
அடுத்த அதிரடி
அடுத்த ஆட்டத்திலும் அவர் சும்மா விடவில்லை. நேற்று பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த போட்டியில் கிறிஸ் கெயில் மிகவும் சிறப்பாக விளையாடி செஞ்சுரி அடித்து இருக்கிறார். அவர் 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதில் 11 சிக்ஸ் அடக்கம். அவர் இந்த போட்டியில் ஒரே ஒரு பவுண்டரிதான் அடித்தார் என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
இவர்தான் கெயில்
ஐபிஎல் ஏலம், மேற்கிந்திய தீவுகள் அணி, பஞ்சாப் நிர்வாகம் எல்லாவற்றிற்கும் இவர் இரண்டு போட்டியிலும் பதில் அளித்துள்ளார்.தன்னை பார்ம் அவுட் என்று கூறி ஒதுக்கிய எல்லோருக்கும் ''இதுதான் நான் . நான் இல்லைனா ஐபிஎல் போட்டியே இல்லை'' என்று 11 சிக்ஸர்கள் மூலம் பதில் அளித்துள்ளார்.
சமர்ப்பணம்
நேற்றைய செஞ்சுரியை அவர் தனது மகளுக்கு சமர்ப்பித்துள்ளார். இன்று அவரது மகளுக்கு பிறந்தநாள் என்பதால் இந்த செஞ்சுரி. ஆனால் அந்த செஞ்சுரி அவர் மகளுக்கு மட்டுமானது கிடையாது, அவரது புயலை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்குமானது.