திருவனந்தபுரம்: ஐபிஎல் ராஜஸ்தான் அணிக்காக விளையாட சஞ்சு சாம்சன் எப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக குறைந்த போட்டிகளிலேயே விளையாடி இருந்தாலும், சஞ்சு சாம்சனுக்காக கவலைப்படாத கிரிக்கெட் வீரர்களே இல்லை என்று சொல்லலாம். இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் தொடர் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் சஞ்சு சாம்சன். சென்னை, கேரளா, ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சிறிய வயதிலேயே ஐபிஎல் விளையாடியதன் விளைவால், இளம் வயதிலேயே ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடினால், ஐபிஎல் தொடரில் ஏராளமான சாதனைகளை படைப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் எப்படி கொண்டு வரப்பட்டார் என்ற விவரத்தை ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த பேசுகையில், நானும் சஞ்சு சாம்சனும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 19 வயதில் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட்டிடம் அழைத்து சென்றேன். அப்போது ராகுல் டிராவிட்டிடம், உள்ளூர் கிரிக்கெட்டில் என் பந்துவீச்சில் 6 சிக்சர்களை விளாசிய வீரர் இவர் தான் என்று சஞ்சு சாம்சனை அறிமுகம் செய்தேன்.
இதனை கேட்ட ராகுல் டிராவிட், என்னிடம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் ஸ்ரீசாந்த். ஆனால் இவ்வளவு பொய் சொல்லக் கூடாது என்று என்னை பார்த்து கிண்டல் செய்தார். சஞ்சு சாம்சனுக்காக நாம் அவரிடம் பொய் சொல்லி மாட்டிக் கொண்டேன். பேட்டிங் ட்ரெயல்ஸ்-க்காக சஞ்சு சாம்சன் வருவதற்காக பணத்தையும் நான்தான் பார்த்தேன்.
இதன்பின் ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப் போனால் சஞ்சு சாம்சன் அவரின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனை வேறு அணிக்கும் ட்ரெயல்ஸ் அனுப்ப வேண்டாம். அவரை ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யலாம் என்று என்னிடம் கூறினார்.
அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரை ராஜச்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்கிறோம் என்?று கூறினார். சஞ்சு சாம்சன் அணிக்கு வந்த போது பலரும் ஏன் சிறியவர்க்ளை அணிக்குள் கொண்டு வருகிறாய் என்று சீனியர்கள் கேட்டனர். ஆனால் சாதாரண வீரனாக தொடங்கிய சஞ்சு சாம்சனின் பயணம் இன்று கேப்டனாக உயரும் அளவிற்கு முன்னேறி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.