மும்பை: 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 19 வயதே ஆன அவர் இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பெற்று இருந்தார். துவக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால் கோலி வாய்ப்பு பெற்றார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற விராட் கோலி, இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கினார். அப்போது அணியில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, தோனி, இர்ஃபான் பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர் கான், பிரக்யான் ஓஜா, முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

ரோஹித் சர்மா அப்போது 24 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருந்தார். அதாவது விராட் கோலிக்கு சீனியராக இருந்தார் ரோஹித். அப்போது கவுதம் கம்பீர் 57 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருந்தார். அப்போதைய அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர் யுவராஜ் சிங் தான். அவர் 213 போட்டிகளில் ஆடி இருந்தார்.
அவருக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங் 172 போட்டிகளிலும், ஜாகிர் கான் 145 போட்டிகளிலும் ஆடி இருந்தனர். கேப்டன் தோனி 116 போட்டிகளில் ஆடி இருந்தார். இப்படி அனுபவ வீரர்களுக்கு இடையே அறிமுகமான விராட் கோலி கவுதம் கம்பீருடன் துவக்க வீரராக இணைந்து களத்துக்கு வந்தார். அப்போது அவர் படபடப்பாக காணப்பட்டார்.
அவரை ஆசுவாசப்படுத்தினார் கவுதம் கம்பீர். மேலும், அவரது பதற்றத்தை குறைக்கும் வகையில் தானே முதல் ஓவரின் முதல் பந்தை சந்தித்தார் கம்பீர். துரதிஷ்டவசமாக அவர் இரண்டு பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சுரேஷ் ரெய்னா உடன் இணைந்து விராட் கோலி பேட்டிங் செய்தார்.
இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ், விராட் கோலியை அச்சுறுத்தும் வகையில் ஸ்விங் பந்துகளை வீசினார். அப்போது விராட் கோலி பதற்றத்துடனே இருந்தார். பின்னர் அவர் 22 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி மோசமாக பேட்டிங் ஆடியது. 46 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. இலங்கை அணி அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. தனது முதல் போட்டியில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் கோலி. இந்திய அணியும் தோல்வியடைந்தது. இப்படிதான் விராட் கோலியின் துவக்கம் அமைந்தது.