அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மழை சுக்கு நூறாக உடைத்துள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மழை நின்ற நிலையில் நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். பிசிசிஐயின் உயர் நிர்வாகிகளும் மைதானத்திற்கு வந்து களத்தை சோதித்தனர்.

அப்போது 9:35க்கு போட்டியை தொடங்கி 20 ஓவர் முழுவதையும் நடத்தலாம் என்றும் நடுவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்த நிலையில் எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கினால் எவ்வளவு ஓவர்கள் குறைக்கப்படும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். போட்டி 9:45க்கு தொடங்கினால் 19 ஓவர் ஆட்டமாக நடைபெறும்.
அதுவே 10 மணிக்கு தொடங்கினால் 17 ஓவர் ஆட்டமாக நடைபெறும். 10.15 மணிக்கு தொடங்கினால் 15 ஓவர் ஆட்டமாக ஓவர்கள் குறைக்கப்படும். இதேபோன்று இரவு 11 மணிக்கு ஆட்டம் தொடங்கினால் போட்டி 12 ஓவராக குறைக்கப்படும். இரவு 11:30 மணிக்கு போட்டி தொடங்கினால் ஆட்டம் ஒன்பது ஓவராக குறைக்கப்படும். இரவு 12.06 மணிக்கு போட்டி தொடங்கினால் ஆட்டம் 5 ஓவராக நடத்தப்படும்.
ஆனால் அதன் பிறகும் போட்டி தொடங்க முடியவில்லை என்றால் அன்றைய ஆட்டம் கைவிடப்பட்டு திங்கட்கிழமை மீண்டும் இரவு போட்டி நடத்தப்படும். இந்த நிலையில் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று போட்டியை நடத்தி முடிக்க பிசிசிஐ நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். அதற்கு மழை ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இறுதிப்போட்டி இன்று நடைபெற சாத்தியமாகும். அகமதாபாத்தில் மழைநீர் வெளியேற சிறப்பு வசதி இருக்கிறது. இதனால் மழை நின்றால் மட்டும் போதும்.