
ஆப்ஷன் லிஸ்ட்
இந்த நிலையில், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பாக, இலங்கை, இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில், இலங்கை மட்டும் தாங்களாகவே முன் வந்து, ஐபிஎல் தொடரை நடத்தித் தருவதாக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த நாட்டில் எதிர்பாராதவிதமாக இப்போது தினசரி பாதிப்பு 2000க்கும் அதிகமாக எகிறி வருகிறது. எனினும், பிசிசிஐ-யின் ஆப்ஷன் லிஸ்டில் இருந்து இலங்கை நீக்கப்படவில்லை.

காஸ்ட்லி அமீரகம்
அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகமும் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளது. அங்கு இலங்கை, இங்கிலாந்தை விட தினசரி வைரஸ் பாதிப்பு குறைவு தான். இறப்புகளும் குறைவு. சிறப்பு. இலங்கை போன்று ஓப்பனாக 'நாங்க இருக்கோம்' என்று சொல்லாவிட்டாலும், எப்போது கேட்டாலும், 'இந்தா ரெடி' என்று அட்டெண்டன்ஸ் கொடுக்க தயாராக உள்ளது. ஆனால், அங்கு போட்டிகளை நடத்த இந்தியா செலவு செய்ய வேண்டிய தொகைகளை கேட்டால் தான் நமக்கு 'ஒரு நிமிஷம் அப்படியே தலை சுத்திடுச்சு' மோட் வந்துவிடுகிறது.

ஜிடிபி-யில் 5 பெர்சன்ட்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தியது இந்தியா. அதற்கு முன், 2014ம் ஆண்டு, இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்த பொழுது, 15 நாட்களுக்கான போட்டிகளை அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. அதாவது, 2014 ஏப்ரல் 16 - 30 வரையிலான போட்டிகள் அங்கு நடத்தப்பட்டது. அதற்கு நாம் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.250 கோடி. இது கூட பெரிய விஷயமல்ல. வெறும் 15 நாளில், 250 கோடி வருமானம் ஈட்டியதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த வளர்ச்சியில், 5 சதவீதத்தை 'பெப்சி' ஐபிஎல் தனி ஒருவனாக உருவாக்கி திகைக்க வைத்தது.

100 கோடிக்கும் மேல்
அதேபோல், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக முழு தொடரையும் சவுரவ் கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 98.5 கோடி. கொரோனாவால் சென்ற ஆண்டு ஸ்பான்சர்ஸ்ஷிப் வருவாயில் மட்டும் 30 - 40% வருமானத்தை பிசிசிஐ இழந்தது. இதனால், பல செலவுகள் குறைக்கப்பட்டது. ரசிகர்களும் நேரடியாக வந்து போட்டியை பார்க்கவில்லை. இவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், பிசிசிஐ 98.5 கோடி செலவு செய்தது. மேலும், பெண்கள் ஐபிஎல் டி20 தொடரை நடத்த எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் 2.52 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டையும் சேர்த்து செலவு 100 கோடியைத் தாண்டியது.

எகிறும் செலவு
அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வழக்கமான கோவிட் -19 சோதனைகளை நடத்துவதற்காக 9.49 கோடி ரூபாய் செலவு, வீரர்களின் பயோ-பபுளுக்காக 3 கோடி என்று கிட்டத்தட்ட 13 கோடி தனியாக செலவழிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 2019 வரை, ஒவ்வொரு போட்டியையும் நடத்த அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்படும். அதாவது ஒரு போட்டியின் செலவினத் தொகை ரூ.50 லட்சம். ஆனால், கடந்த ஆண்டு இந்த தொகை அப்படியே இரட்டிப்பானது. ஒரு போட்டிக்கு 1 கோடி செலவு. இந்தியாவை விட, அமீரகத்தில் ஒவ்வொரு போட்டிக்குமான செலவினத் தொகை அதிகமாகும். ஆனால், வேறு வழியின்றி அங்கே தொடரை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

செலவு தாறுமாறா இருக்கும்
இந்த நிலையில், தான் இப்போது மீண்டும் அமீரகத்தில் போட்டிகளை நடத்தலாமா என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு விட்ட 40 சதவிகித வருமானத்தையும் சேர்த்து இந்த வருடம் அள்ளிவிடலாம் என்று பிசிசிஐ கணக்குப் போட, கொரோனா அது ஒரு கணக்கை போட, இப்போது விழி பிதுங்கி நிற்கிறது கங்குலி டீம். மீண்டும் அமீரகத்தில் போட்டிகளை நடத்தினால், கடந்த ஆண்டை விட இன்னும் அதிகமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். எனினும், 31 போட்டிகளே மீதமிருப்பதால், எந்த விலை சொன்னாலும் கொடுக்க உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் தயாராக இருக்கும் என்பதில் எள்ளளவிலும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











