மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் அதிகளவிலான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் விராட் கோலி மோசமான பேட்டிங் ஆடும் போதும் ரோஹித் சர்மா ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்வார்கள்.
இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக சோசியல் மீடியாவில் விராட் கோலி சொதப்புவதை "சோக்லி" என்றும், ரோஹித் சர்மா சொதப்புவதை "வடபாவ்" என்றும் கிண்டல் செய்து ட்ரெண்ட் செய்வார்கள். தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விராட் கோலி தனது குடும்பத்தினருடன் லண்டனில் இருந்து வருகிறார். தனது 2வது குழந்தை பிறப்பிற்காக லண்டன் சென்ற விராட் கோலி, அதன்பின் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட மட்டுமே வந்துள்ளார். அதேபோல் நடிகை அனுஷ்கா சர்மாவும் லண்டனிலேயே மொத்தமாக குடியேறும் நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் விராட் கோலி சாலையை சாதாரணமாக க்ராஸ் செய்யும் வீடியோ ட்ரெண்டாகியது. எந்த ரசிகர் பட்டாளமும் அவர் பக்கம் இல்லாமல் சாதாரண மனிதரை போல் விராட் கோலி நடந்து சென்றார். இந்தியாவில் இதுபோன்ற சாதாரண வாழ்க்கையை எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே விராட் கோலி லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது சோசியல் மீடியாவில் விவாதமான நிலையில், நேற்று ரோஹித் சர்மா மும்பை சாலையில் தனது நீல நிற லாம்போர்கினி காரில் செல்லும் வீடியோ வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்தனர். ஏற்கனவே கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி யாராவது பார்க்க வந்தால், அடுத்த நாளில் ரோஹித் சர்மாவையும் ரசிகர்கள் சந்திப்பது போல் வீடியோ வெளியாகியது.

இதனால் விராட் கோலியின் சாதாரண நடவடிக்கையை கூட ரோஹித் சர்மாவின் பிஆர் ஏஜென்சி நிர்வாகிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் வீடியோ வெளியான அடுத்த நாளிலேயே ரோஹித் சர்மாவின் வீடியோ வெளியாவது ஏன் என்றும் இரு தரப்பு ரசிகர்களும் மோதி கொண்டுள்ளனர்.