ஸ்ரீநகர் : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தாம் ஓய்வு பெற்ற பிறகும் தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருவது அவருடைய ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு சென்று பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் இன்றும் இருக்கிறது. சச்சினுடைய சாதனையை விராட் கோலி அண்மையில் உடைத்தாலும், இன்னும் பல ரெக்கார்டுகள் அப்படியே இருக்கிறது.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் தற்போது பல உதவிகளை செய்து வருகிறார். நமக்கு கடவுள் சிரிப்பு என்று ஒரு பரிசை கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் தினமும் சிரிக்க மறந்து விடுகிறோம். ஆனால் இந்திய நாட்டில் ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகளுக்கு சிரிக்கவே முடியாத அளவு உடல் குறைபாடு இருக்கிறது. மூக்கும் வாயும் ஒட்டி இருப்பது மற்றும் வாய் வேறு வடிவத்தில் இருப்பது என பல குறைபாடுகள் குழந்தைகளுக்கு இருக்கிறது.
இந்த குழந்தைகளால் சிரிக்க கூட முடியாது. மேலும் உணவு உண்ண கூட அவர்கள் கஷ்டப்பட வேண்டும். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய அறக்கட்டளை மூலம் காஷ்மீரில் இதுபோல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்துள்ளார். இதன் மூலம் பல குழந்தைகளின் வாய் மறுசீரமைக்கப்பட்டு தற்போது அவர்களால் சிரிக்க முடிகிறது.
இப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள குழந்தைகளை சச்சின் மற்றும் அவருடைய மனைவி மகள் ஆகியோர் காஷ்மீருக்கு சென்று சந்தித்தனர்.
அப்போது மருத்துவர்கள் இந்த குழந்தைகளுக்கு எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்களுடைய முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தோம் என்பது குறித்து விளக்கினார்கள். இதைப் பார்த்து சச்சின் நெகிழ்ச்சி அடைந்தார். உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தமக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக சச்சின் கூறினார்.
மேலும் நாம் சிரிப்பு என்ற பரிசை அடிக்கடி மறந்து விடுகிறோம். ஆனால் நாட்டில் இத்தனை குழந்தைகளுக்கு சிரிக்க கூட முடியவில்லை என்று நினைக்கும் போது தான் நமக்கு அதன் அருமை தெரிகிறது என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.இதேபோன்று சச்சின் காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி தனது வீடியோவில் பதிவிட்டு வருகிறார்.