சென்னை : ஐபிஎல் 16வது சீசன் தற்போது இரண்டு வாரங்களே முடித்து மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைக்கிறது. அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி முடித்து விட்டனர். லக்னோ, டெல்லி அணிகள் நான்கு ஆட்டங்கள் விளையாடி முடித்துவிட்ட நிலையில் இன்று ராஜஸ்தான் சிஎஸ்கே அணியும் தங்களது நான்காவது லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதில் டெல்லி தவிர மற்ற அனைத்து அணிகளும் புள்ளிக்கணக்கை தொடங்கி விட்டார்கள். தற்போது லீக் தொடரில் யார் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதனால் இனி நடைபெறும் ஒவ்வொரு ஆட்டங்களும் மிகவும் முக்கியமாக கருதப்படும்.

தற்போது பொறுத்தவரை லக்னோ நான்கு போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், குஜராத் அணி மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் உடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளுடன் நான்கு புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திலும், பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும் உள்ளது .
இதில் இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடம் வரை அனைத்து அணிகளும் ஒரே மாதிரி இருக்கிறது.

வெறும் ரன் ரேட் மட்டும் தான் இவர்களை பிரிக்கிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் சென்னை அணிகள் மோதும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் நான்கு போட்டிகள் விளையாடி ஆறு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி விடும்.
இதுவே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் உடன் முதலிடத்தை பிடித்து விடும். ஒரு வேலை சிஎஸ்கே தோற்றால்,அதே ஐந்தாவது இடத்தில் இருப்பார்கள். இதனால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்காக சிஎஸ்கே அணி இன்று தீவிரம் காட்டும்.