டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாய், உடல் நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2004ல் பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி வைத்து, மிகப் பெரிய அரசியல் ராஜதந்திரியாக விளங்கினார் வாஜ்பாய். அந்தத் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களை நேரில் சந்தித்து, போட்டிகளில் மட்டுமல்ல, மனங்களையும் வென்று வாருங்கள் என்று வாழ்த்தினார் வாஜ்பாய்.
அப்போது இந்திய அணியில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு இன்று மிகப்பெரிய இழப்பு. நாட்டுக்காக வாஜ்பாய் செய்த பணிகள், பங்களிப்பை கணக்கிடவே முடியாது. அவரால் இழந்து வாடுவோருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சச்சின் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.